பெஞ்சல் புயல் கரையை கடந்த பிறகும் விடாத சூறைக்காற்று.. கடலூரில் விடிய விடிய பெய்த மழை.. ஆறா ஓடுதே!
சென்னை: ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்த பிறகும் கனமழை, சூறைக்காற்று தொடர்ந்து வருகிறது. கடலூர் சுற்று வட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்துள்ளது. மரக்காணம் பகுதியில் பலத்த சூறைக்காற்று தொடர்ந்து வீசி வருகிறது.
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை மிரட்டிய ஃபெஞ்சல் (ஃபெங்கல் - Fengal) புயல் நேற்று இரவு மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதனால் மழை படிப்படியாக குறைந்து வருகிறது. ஃபெஞ்சல் புயலின் முனைப்பகுதி நேற்று மாலை கரையைக் கடக்கத் தொடங்கிய நிலையில் இரவு 11.30 மணியளவில் புயல் முழுமையாக கரையைக் கடந்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்ல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 7 வடமாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது.

கரையை கடந்ததும் உடனடியாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி, படிப்படியாக வலு குறையும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்தது. ஃபெஞ்சல் புயல், கரையை கடந்தபோது மரக்காணம் பகுதிகளில் சுமார் 90 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
இந்நிலையில், புயல் கரையைக் கடந்தபிறகும் பலத்த சூறாவளிக் காற்று தொடர்ந்து வருகிறது. மாமல்லபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை நின்றாலும், தற்போது காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு கருதி மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை. தற்போது வரை மரக்காணத்தில் பலத்த சூறைக்காற்று வீசுகிறது. காற்றின் வேகம் குறையவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கடலூரில் விடிய விடிய கனமழை பெய்துள்ளது. ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு கரையைக் கடந்துவிட்ட பிறகும் கூட கடலூர் வட்டாரத்தில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. விடாது பெய்த கனமழையால் கடலூர் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடுகிறது. ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்தாலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே இன்னும் மழை, காற்றின் தாக்கம் குறையவில்லை எனத் தெரிகிறது.
தென்மண்டல வானிலை மையத்தின் இயக்குநர் பாலசந்திரன் கூறும்போது, "புயல் கரைக்கு அருகே வரும்போது அதன் நகர்வு வேகம் சற்று குறைய வாய்ப்பு உண்டு. புயலை மிகத் துல்லியமாக சொல்ல முடியாது. திடீரென காற்று வீசும். திடீரென மழை பெய்யும். புயலின் அமைப்பே அப்படித்தான். புயல் கரையை கடக்க சில மணிநேரங்கள் கூட ஆகலாம். முழுமையாக கரையை கடக்க சில பல மணிநேரங்கள் ஆகலாம்.
ஒவ்வொரு புயலுக்கும் ஒரு அமைப்பு உள்ளது. அது கடல் பகுதியில் ஒரு மாதிரியும், தரைப்பகுதியில் ஒரு மாதிரியும் இருக்கும். சில சமயங்களில் வேகமாக கரையை கடக்கும். சில நேரங்களில் மெதுவாக கரையை கடக்கலாம். எனவே, எந்த இடத்தில் புயல் கரையை கடக்கும் என்பதை கூற முடியாது.
ஃபெஞ்சல் புயலைப் பொறுத்தவரை, சில சமயங்களில் 12 கி.மீ, சில சமயங்களில் 7 கி.மீ வேகம், சில சமயங்களில் 13 கி.மீ வேகத்தில் நகர்கிறது. பல்வேறு காரணிகளுடன் தொடர்பிருப்பதால், புயலின் வேகத்தில் மாறுபாடு ஏற்படுகிறது. புயலைச் சுற்றியுள்ள மேககூட்டங்களைப் பொருத்துதான் மழை பொழிவு இருக்கும்.
மேகக் கூட்டங்கள் சூழ்ந்திருந்தால், தொடர்ந்து மழைப்பொழிவும், கொஞ்சம் விலகியிருந்தால் விட்டுவிட்டு மழைப்பொழிவும் இருக்கும். புயல் என்பது ஒரு பரவியிருக்கக்கூடிய அமைப்பு. புயலின் கண்பகுதி கூட ஒரு 10-15 கி.மீ வரை இருக்கும்" என்று தெரிவித்திருந்தார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் அநேக இடங்களில் கன மழை தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மாலை முதல் தொடங்கிய நிலையில் நேற்று இரவு குறைய தொடங்கியது. சென்னையில் ஒரு சில பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி இருந்தாலும், பல இடங்களில் உடனடியாக அந்த நீர் வடிந்துள்ளது.












Click it and Unblock the Notifications