வங்கக் கடலில் நாளை உருவாகிறது ஃபெங்கல் புயல்! எந்த நாடு பெயர் வைத்தது தெரியுமா?
சென்னை: வங்கக் கடலில் நாளை புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஃபெங்கல் என பெயரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தற்போது மாறியுள்ளது. இந்த நிலையில் இது நாளை புயலாக வலுபெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படி புயலாக வலுப்பெற்றால் அதற்கு ஃபெங்கல் என பெயரிடப்படுகிறது. இந்த புயலானது மேற்கு வடமேற்கு பகுதியை நோக்கி நகரும். தற்போது ஆழ்ந்த காற்றழுத்தமானது நாகையிலிருந்து 590 கி.மீ. தூரத்திலும் புதுவையிலிருந்து 710 கி.மீ தூரத்திலும் சென்னையிலிருந்து 800 கி.மீ. தூரத்திலும் இது நிலைக் கொண்டுள்ளது.
அது போல் இலங்கை - திரிகோணமலை அருகே 310 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தமானது மெதுவாக நகர்ந்து வருகிறது. அதாவது மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. இந்த ஃபெங்கல் என்ற பெயரை சவுதி அரேபியா வைத்துள்ளது.
இந்த புயலானது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரையை நெருங்கியதும் அடுத்த 2 நாட்களில் புயலாக தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனையொட்டிய, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், கடந்த 23 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.நேற்று முன் தின நிலவரப்படி, இது அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. நேற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
சென்னைக்கு டிசம்பர் 2-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. இன்றைய தினம் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை 3.7 மீ வரை கடல் அலை மேலெழும்பக் கூடும். கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், நாகப்பட்டினம் (வடக்கு) மாவட்ட கடலோரப் பகுதிகளுக்கு கடல் சீற்ற எச்சரிக்கையை பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய கடல்சார் தேசிய மையம் (INCOIS) விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications