சென்னைக்கு "அருகே" 50 கி.மீ. தூரத்தில் நைட் ஸ்டே செய்யும் பெஞ்சல் புயல்! இன்னிக்கு ஒரு புடி!
சென்னை: பெஞ்சல் புயல் (பெங்கல்) இன்று இரவு சென்னைக்கு 50 கி.மீ. தூரத்தில் தங்கும் வாய்ப்புள்ளதால் மேக கூட்டங்கள் நிறைய உருவாகி மழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் தெரிவித்துள்ளார். அவ்வாறு புயல் ஒரே இடத்தில் நிலை கொள்வதால் வடதமிழக கடலோர மாவட்டங்களில் அதீத மழையை கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் பெஞ்சல் (பெங்கல்) புயலானது சென்னைக்கு 190 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் இன்று பிற்பகலில் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது.

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மாலை முதலே கனமழை பெய்து வருகிறது. பயங்கர காற்றும் வீசி வருகிறது.
இந்த நிலையில் இந்த புயலானது பிற்பகல் கரையை கடக்கும் என சொல்லப்பட்ட மாலைதான் கரையை கடக்கும் என சொல்கிறார்கள். இதுகுறித்து டெல்டா வெதர்மேன் ஹேமசந்திரன் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: புயல் தற்போது புதுவைக்கு கிழக்கே 100 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் உள்ளது. அது போல் நாகைக்கு 190 கி.மீ. தூரத்தில் உள்ளது.
இந்த புயல் தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இரவு 7 மணி வாக்கில் சென்னை - புதுவை இடையே மரக்காணம் - மகாபலிபுரத்தை மையமாக வைத்து கரையை கடக்க தொடங்கும். இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுவை, கடலூர் மாவட்டங்களில் பரவலாக மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும்.
அது போல் குறுகிய காலத்தில் அதிமழை பொழிவும் இருக்கும். தரைக்காற்றின் வேகமும் மழைப்பொழிவும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் படிப்படியாக அதிகரிக்கும். எனவே சென்னை முதல் புதுவை வரையிலான பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம். ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் மழை படிப்படியாக தொடங்கும் என ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது மரக்காணம் டூ மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என தெரிவித்திருந்தார். இதை புயல் கரையை கடக்கும் இடமாற்றத்தை இந்திய வானிலை மையமும் உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில் மரக்காணத்தை சேர்ந்த மக்கள் எக்காரணத்தைக் கொண்டும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் புயல் கரையை கடக்க காலதாமதமாகும் என ஹேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: புயல் மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. கடந்த இரு நாட்களாகவே அரபிக் உயரழுத்தம், பசிபிக் உயரழுத்தம் என இரு வேறு தாக்கங்கள் இருந்தது.
தற்போது பசிபிக் உயரழுத்தம் காரணமாக மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. புயல் கரையை நெருங்கும் போது நிலப்பரப்பை அடையும் போது அரபிய உயரழுத்தத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும். இதனால் ஒரே இடத்தில் புயல் நிலை கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அப்படியாக புயல் ஒரே இடத்தில் நிலை கொள்ளும் பட்சத்தில் புயல் கரையைக் கடப்பதற்கான நிகழ்வு நாளை காலை வரை நீடிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக ஒரு இடத்தில் புயல் மையம் கொண்டால் அது நகர்ந்து வந்த பாதையில் இருந்து திசை மாறி நகரத் தொடங்கும்.
அப்படிப் பார்க்கும் போது சென்னைக்கும் புதுவைக்கும் இடையே மரக்காணம்- மகாபலிபுரத்திற்கு அருகே ஒரே இடத்தில் மையம் கொண்டு நாளை காலை முதல் கரையை கடக்கத் தொடங்கும். இதனால் வடதமிழக கடலோர மாவட்டங்களில் அதீத கனமழையும் குறைந்த நேரத்தில் தீவிர மழைப்பொழிவும் இருக்கும்.
கடலிலேயே புயல் மையம் கொள்வதால் காற்றின் வேகம் அதிகரிக்காது, சற்று குறையும். ஆனால் மழை மேகங்கள்தான் அடிக்கடி உருவாகி கரையை நோக்கி வரும். புயல் கரையைக் கடப்பதில் தாமதமடைகிறதே தவிர அதன் தீவிரம் குறையவில்லை. இதனால் மழைப் பொழிவு அதிகமாகவே இருக்கும். சென்னைக்கு அருகே 50 கி.மீ. தூரத்தில் புயல் இன்று இரவு தங்குகிறது (stalling). இவ்வாறு ஹேமசந்திரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications