நிலைகுலைந்த சென்னை.. நேரில் களமிறங்கிய முதல்வர் ஸ்டாலின்! நிவாரண முகாம்களில் ஆய்வு.. முக்கிய ஆலோசனை
சென்னை: மிக்ஜாம் புயல், மழை பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நேரில் களஆய்வு செய்து வருகிறார். நிவாரண முகாம்களில் தங்கி உள்ள மக்களுக்கு உணவு பரிமாறிய அவர் இன்று முக்கிய ஆலோசனையை மேற்கொள்ள உள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் அதி கனமழை பெய்துள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னையில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. அதோடு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் 8 பேர் வரை பலியாகி உள்ளனர். மிக்ஜாம் புயல் தற்போது சென்னையை விட்டு விலகி ஆந்திரா நோக்கி சென்றுள்ளது.
இதனால் சென்னையில் இன்று காலை முதல் மழை என்பது இல்லை.இருப்பினும் வெள்ளம் என்பது தேங்கி உள்ளது. இதனை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் களஆய்வை தொடங்கி உள்ளார்.
அதன்படி முதல்வர் ஸ்டாலின் வடசென்னையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சென்னை சென்ட்ரல் கண்ணப்பர் திடல் நிவாரண முகாமில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதையடுத்து அவர் பெரியமேடு நிவாரண முகாம்களில் ஆய்வு செய்தார். அப்போது அவர் மக்களுக்கு உணவு பரிமாறினார்.
மேலும் இன்று அவர் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் மிக்ஜாம் புயல், மழை பாதிப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தின்போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் புயல், மழை பாதிப்பு விபரங்களை அவர் கேட்டறிய உள்ளார். அதன்பிறகு பாதிப்பு விபரங்கள் கணக்கீடு செய்யப்பட்டு அறிக்கையாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
மேலும் மத்திய குழுவை தமிழகத்தில் ஆய்வு செய்ய வர செய்வது, புயல், வெள்ள பாதிப்பு நிவாரணத்தை மத்திய அரசிடம் கேட்பது தொடர்பாக இன்று நடக்கும் அமைச்சர்கள், அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் விவாதிக்க உள்ளார்.












Click it and Unblock the Notifications