மிக்ஜாம் புயல் பாதிப்பு.. திருத்தணி கோவில் மலைப்பாதையில் மண்சரிவு.. பக்தர்களுக்கு அனுமதியில்லை
திருவள்ளூர்: மண்சரிவு காரணமாக திருத்தணி கோயிலுக்கு மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்ல அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மலைக்கோயிலுக்கு செல்ல படிவழியினை மட்டுமே பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையின் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த 3ஆம் தேதி இரவு முதல் 4 தேதி இரவு வரைக்கும் விடாது கன மழை பெய்தது. இதனால் திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டது.

மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக மணல் மூட்டைகளைக் கொண்டு சரி செய்து போக்குவரத்து ஏற்படுத்தினார். இந்நிலையில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, திருத்தணி தொகுதி எம்எல்ஏ எஸ்.சந்திரன், இணை ஆணையர் ரமணி மற்றும் அறங்காவலர் குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது அமைச்சர் ஆர்.காந்தி உடனடியாக சீரமைப்பு பணியினை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் இத்தனை மலைக்கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மலைக் கோவிலுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் நுழைவுப் பகுதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் பல்வேறு பகுதியில் இருந்து வாகனத்தில் வருகை தந்த பக்தர்கள் படி வழியாகச் சென்று முருகனை தரிசித்து வருகின்றனர்.

பக்தர்கள் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு நலன் கருதி தற்காலிகமாக அனைத்து ரக வாகனங்கள் செல்ல 11.12.2023 முதல் 16.12.2023 வரை தடைவிதிக்கப்பட்டு மலைப்பாதை மற்றும் படிவழியில் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது மலைப்பாதை வழியாக நடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் மீண்டும் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மலைப்பாதையில் நடந்து செல்வதற்கு அனுமதியில்லை என்று கோவில் நிர்வாக அறிவித்துள்ளது. இன்று 14.12.2023 முதல் 20.12.2023 வரை பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல படிவழியினை மட்டுமே பயன்படுத்திக்கொள்ள திருக்கோயில் நிர்வாகத்தால் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications