மிக்ஜாம்: சிக்கி திணறும் சென்னை- ஆளுநர் ரவி வெளியிட்ட அறிக்கையில் சொல்லி இருப்பது என்ன தெரியுமா?
சென்னை: மிக்ஜாம் புயல் கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெள்ளம் போல குடியிருப்புகளுக்குள் பாய்ந்து ஓடுகிறது. இந்த நிலையில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்து ஆளுநர் ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வங்க கடலில் குடியேறிய மிக்ஜாம் புயல் ஒட்டுமொத்த உக்கிரத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் பெருமழையின் பிடியில் சிக்கி சிதைந்து கொண்டிருக்கிறது. சென்னையில் 47 ஆண்டுகளுக்கு பின்னர் அதீத கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.

மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் வரை அதாவது இன்று இரவு வரை இந்த மழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையை சுற்றிய ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெள்ளமென ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னை அடையாற்றில் செம்பரம்பாக்கம் உபரி நீர் ஓடுகிறது. கொசஸ்தலை, கூவம் ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. சென்னை மாநகரின் கால்வாய்களில் வெள்ளம் பெருகு குடியிருப்புகளுக்குள் நுழைகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .அந்த அறிக்கை: மிக்ஜாம் புயல் நமது கிழக்கு கடலோர மாவட்டங்களில் சில மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அத்தியாவசிய சேவைகளை பராமரிக்கும் பணியிலும் மத்திய, மாநில அரசு துறைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலைமையை மத்திய அரசும் மாநில அரசும் உயர் மட்ட அளவில் கண்காணித்து வருகின்றன. மாநில அரசின் அறிவுரைகளை மக்கள் பின்பற்றி, நிலைமை சீராகும் வரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications