மிரட்டும் மிக்ஜாம் புயல்.. டிசம்பர் 4ம் தேதி.. செமஸ்டர் தேர்வுகள் ரத்து.. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
சென்னை: மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது வரும் 4ம் தேதி திங்கட்கிழமை நடக்க இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பலகலைக்கழகம் அறிவித்துள்ளது.
மிக்ஜாம் புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து திங்கட்கிழமை 4-ஆம் தேதியன்று முற்பகல் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும் என்றும், பிறகு கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 5ஆம் தேதியன்று முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் - மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலாக கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வட தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் மிக்ஜாம் புயலானது கரையைக் கடந்தாலும் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
4-ஆம் தேதியன்று திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யக்கூடும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு முன்னேற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தேவையின்றி யாரும் வெளியில் வரவேண்டாம் என்றும் நீர்நிலைகள் அருகே யாரும் செல்ல வேண்டாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதேபோல் கனமழை மற்றும் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டனர். இந்த நிலையில், வரும் 4ம் தேதி திங்கட்கிழமை நடக்க இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பலகலைக்கழகம் அறிவித்துள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications