சென்னையில் இருந்து 100 கிமீ விலகிச் சென்ற மிக்ஜாம் புயல்- ஆந்திராவில் நாளை முற்பகல் கரையை கடக்கும்!
சென்னை: சென்னையில் இருந்து மிக்ஜாம் புயல் தற்போது 100 கி.மீ தொலைவு வடகிழக்கு திசையில் விலகிச் சென்றுவிட்டது; தற்போது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து ஆந்திராவின் பாபட்லா அருகே நாளை முற்பகல் மிக்ஜா புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவெடுத்த மிக்ஜாம் புயல் மிக ஆக்ரோஷம் காட்டி வருகிறது. சென்னை மாநகரை மட்டும் அல்லாது திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என புறநகர் மாவட்டங்களையும் புரட்டி எடுத்துவிட்டது. சென்னை மாநகரமும் புறநகர் பகுதிகளும் வரலாறு காணாத பெருவெள்ளத்தை எதிர்கொண்டிருக்கின்றன. சென்னை புறநகர் ஏரிகள் அனைத்தும் நிரம்பி உபரி நீர் போக்கிடமின்றி சாலைகளிலும் குடியிருப்புகளிலும் காட்டாறு வெள்ளம் போல பாய்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் பல பகுதிகளில் அனைத்து போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு தனித் தீவுகளாக்கப்பட்டன. விமான சேவை, ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன.

சென்னையை கடந்து பழவேற்காடு பகுதியில் நகர்ந்து சென்ற மிக்ஜாம் புயல் தற்போது சென்னையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் விலகி ஆந்திரா நோக்கி சென்றுவிட்டது. மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்த மிக்ஜாம் புயல் தற்போது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து ஆந்திராவுக்குள் செல்கிறது.
இதனையடுத்து ஆந்திராவின் நெல்லூர், திருப்பதி, பிரகாசம், பாபட்லா, கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கோனசீமா, காக்கிநாடா மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெல்லூர் அருகே கிருஷ்ணபட்டனம் துறைமுகத்தில் அதீத புயல் தாக்குதலை அறிவிக்கும் 10-ம் எண் கூண்டு ஏற்பட்டுள்ளது.
வங்க கடலில் மணிக்கு 8 கிமீ நகர்ந்து செல்லும் மிக்ஜாம் புயல், ஆந்திரா மாநிலத்தில் நெல்லூர்- மச்சிலிப்பட்டணம் இடையே பாபட்லா அருகே நாளை முற்பகல் அதிதீவிர புயலாகக் கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications