உருவானது சென்யார் புயல்.. தமிழ்நாட்டுக்கு பாதிப்பா? வானிலை ஆய்வு மையம் சொன்ன தகவல்!
சென்னை: அந்தமான் அருகே மலாக்கா ஜலசந்தியில் சென்யார் புயல் உருவானது. கடந்த நவம்பர் 22 ஆம் தேதி மலாக்கா ஜலசந்தி, அதனை ஒட்டிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான நிலையில் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தற்போது புயலாக வலுவடைந்தது.
மலேசியா மற்றும் அதனையொட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று (நவம்பர் 26) சென்யார் புயலாக உருவாகியுள்ளது.

மலாக்கா ஜலசந்தி பகுதிகளின் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக செவ்வாய்க்கிழமை (நவ.25) வலுப்பெற்றது. இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று சென்யார் புயலாக உருவெடுத்துள்ளது.
புதிய புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய 'சென்யார்' என பெயரிடப்பட்டுள்ளது. சென்யார் புயல் வடக்கு சுமத்ரா பகுதியில் கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சென்யார் புயல் 2,600 கி.மீ தொலைவியில் உள்ளதால் தமிழ்நாட்டில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல, குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று செவ்வாய்க்கிழமை (நவ.25) காலை குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல், இலங்கை பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை, இந்திய பெருங்கடலில் நிலவுகிறது.
தொடர்ந்து இது, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவம்பர் 26) காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications