வலுப்பெறும் ‘மோந்தா’.. தமிழ்நாட்டின் 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
சென்னை: தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ள சூழலில், மோந்தா புயல் உருவாக வாய்ப்பு இருப்பதைக் குறிக்கும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை, புதுச்சேரி, காரைக்கால், தூத்துக்குடி, பாம்பன் ஆகிய 9 துறைமுகங்களில் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
வரும் 27 ஆம் தேதி காலை மோந்தா புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். சென்னைக்கு தென்கிழக்கே 990 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேற்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நேற்று காலை 5:30 மணிக்கு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இது, மேற்கு - வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில், இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அரபிக்கடல், வங்கக்கடல் என ஒரே நேரத்தில் இரு கடல் பகுதிகளிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.
தற்போது சென்னைக்கு 990 கி.மீ தென் கிழக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 7 கி.மீ வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்கிறது. நாளைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரம் அடையும். நாளை மறுநாள் புயலாக மாறும்.
புயல் உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரும். இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், 28ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 27ம் தேதி, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில், கனமழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த மாவட்டங்களுக்கு, 'ஆரஞ்சு அலெர்ட்' விடுக்கப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இருப்பதால், வங்கக்கடலில் சூறைக்காற்று வீசும். எனவே, தமிழக கடலோரம், ஆந்திரா, மத்திய மேற்கு பகுதிகளுக்கு, 28ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications