டெல்டா பகுதிகளுக்கு கனமழை வார்னிங்.. தயார் நிலையில் பேரிடர் மீட்புப் படைகள்.. முக்கிய அறிவிப்பு
சென்னை: தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழையை எதிர்கொள்ளும் வகையில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 15 குழுக்களும், தமிழக பேரிடர் மீட்பு படையின் 15 குழுக்களும் தயார் நிலையில் இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து நல்ல மழை பெய்துள்ளது. சராசரி மழை அளவைவிட 6 சதவீதம் அதிகமாகப் பெய்துள்ளது. ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமான் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை நவம்பர் 23 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த இரண்டு நாட்களில் தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும் வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் நவம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் கன மழைக்கு வெளுத்து வாங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் தெற்கு அந்தமானை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி நாளை (நவம்பர் 23 ஆம் தேதி) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக மாறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஓரிரு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் நவம்பர் 25, 26, 27 ஆகிய தேதிகளில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 20 சென்டிமீட்டர் அளவுக்கு கனமழை பெய்யலாம் என்று தெரிவித்துள்ளது.
கன மழையை எதிர்கொள்ளும் வகையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக போதுமான உபகரணங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மண்டல அளவிலான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகளையும் மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய பேரிடர் மீட்புப் படையின் 15 குழுக்களும், தமிழக பேரிடர் மீட்புப் படையின் 15 குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications