குமரிக் கடலில் உருவாகும் ”டிட்வா” புயல்? இனி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் தான்! தேதி குறித்த வெதர்மேன்
சென்னை: மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் உருவாகியுள்ள 'சென்யார்' புயலால் தமிழகத்திற்கு பெரிய பாதிப்பு இருக்காது என்றும், குமரிக்கடல் பகுதியில் வரும் 29 ஆம் தேதி "டிட்வா" புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இந்த புயலால் தமிழகத்திற்கு வரும் 29 மற்றும்39 ஆம் தேதி "ரெட் அலர்ட்" எச்சரிக்கை விடுக்கும் வகையில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று சற்று மழை குறைந்தது. கடந்த 3 நாட்களாக பரவலாக மழை வெளுத்து வாங்கியது. தென் மாவட்டங்களில் இடைவிடாமல் மழை கொளுத்து எடுத்தது. எனினும் இன்று ராமநாதபுரம், நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது.

"டிட்வா" புயலால் "ரெட் அலர்ட்"
இந்த நிலையில், "சென்யார்" புயல் உருவாகியுள்ள நிலையில் இதனால் தமிழகத்தில் பெரிய பாதிப்பு இருக்காது என்றும், குமரிக் கடல் பகுதியில் வரும் 29 ஆம் தேதி வாக்கில் "டிட்வா" புயல் உருவாக வாய்ப்பு உள்ளது எனவும், இதனால் தமிழகத்தில் அதி கனமழை அதாவது ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்படும் வகையில் மழை இருக்கும் என டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர் கூறியுள்ளார்.
மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் இன்று காலையில் "சென்யார்" புயலாக மேலும் வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து, காலை 8.30 மணியளவில் இந்தோனேசியா கடற்கரையை கடந்துள்ளது. இந்த புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது.
"டிட்வா" என பெயரிடப்படும்
அதே நேரத்தில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருக்கிறது. இது தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை - இந்திய பெருங்ககடல் பகுதிகளில் நிலவுகிறது.
அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும். அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, வரும் 29 ஆம் தேதி புயலாக மாறக்கூடும். அப்படி புயலாக மாறும் பட்சத்தில் இதற்கு "டிட்வா" என பெயரிடப்படும். இந்த புயல் அதே திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம்-புதுவை கடலோரப்பகுதிகளை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.
அதி கனமழை பெய்யக்கூடும்
இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் மிக முதல் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்படும் வகையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக டெல்டா மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும். தமிழகம் முழுக்க கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். இவாறு அவர் கூறியுள்ளார்.
வானிலை மையம் எச்சரிக்கை
வானிலை மையம் கூறுகையில், வரும் 29 ஆம் தேதி திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என்று கூறியிருந்தது.












Click it and Unblock the Notifications