காலையிலேயே.. தீபாவளி நாளில் சென்னையில் கொட்டும் மழை.. பட்டாசு வெடிக்க முடியாமல் சிறுவர்கள் தவிப்பு
சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தீபாவளி தினமான இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளில் மழை பெய்து வருகிறது. பட்டாசுகளை வெடிக்க முடியாமல் சிறுவர்கள் தவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாளை அக்டோபர் 21-ஆம் தேதி வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் தலா ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவை இரண்டும் வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு உள்ளதால், ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் உருவாகும் சாத்தியமும் உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர் மற்றும் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளையும், நாளை மறுநாளும் கனமழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், தீபாவளி தினமான இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, திருவல்லிக்கேணி, திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை, ஆலந்தூர், வேளச்சேரி பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதேபோன்று புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், மதுரவாயல், வானகரம், பூவிருந்தவல்லி, திருவேற்காடு உள்ளிட்டப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. காலையிலேயே மழை பெய்து வருவதால் பட்டாசுகளை வெடிக்க முடியாமல் சிறுவர்கள், சிறுமியர் தவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications