எவ்வளவு மழை, மேகம் சூழ்ந்திருந்தாலும் சென்னையில் வெப்பம் அதிகம் ஏன்? கூகுள் ஆண்டவர் காட்டிய விடை
சென்னை: எவ்வளவு மழை பெய்தாலும், மேகக்கூட்டங்கள் சூழ்ந்திருந்தாலும் சென்னையில் மற்ற ஊர்களை விடவும் வெப்பம் அதிகமாக இருப்பது ஏன் தெரியுமா? இந்த கேள்விக்கான விடையை கூகுளில் தற்செயலாக காண முடிந்தது. அறிவியல் பூர்வமான உண்மை குறித்தோ, விஞ்ஞான ரீதியான காரணங்கள் குறித்தோ இந்த பதிவில் நாம் பார்க்க போவது இல்லை. சாதாரண மனிதரின் சந்தேகத்தை பற்றியே பார்க்க போகிறோம்.
கடந்த 10 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், மதுரை, தேனி, தஞ்சாவூர் உள்பட போன்ற மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது.

கடந்த மார்ச் 1-ந் தேதி முதல் மே 22-ந் தேதி வரையிலான கோடை காலத்தில், கோடை மழை தமிழகத்தில் 12 செ.மீட்டர் (124.2 மி.மீட்டர்) பதிவாகி இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் இயல்பு அளவு 10 செ.மீட்டர் (107 மி.மீட்டர்). அந்த வகையில் கோடை மழை தமிழகத்தில் இயல்பைவிட 16 சதவீதம் அதிகம் பெய்திருக்கிறது. அதிகபட்சமாக, கன்னியாகுமரியில் 29 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 26 செ.மீட்டர், நீலகிரியில் 22 செ.மீட்டர், கோவையில் 21 செ.மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தாலோ அல்லது மேகமூட்டம் கூடியிருந்தாலே வெப்பம் அன்றைக்கு குறைவாக இருக்கும். ஆனால் சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும், மேகக்கூட்டங்கள் சூழ்ந்திருந்தாலும் சென்னையில் மற்ற ஊர்களை விடவும் வெப்பம் அதிகமாக இருப்பது போலவே தோன்றும்..
வெளியில் வானமே இருண்டு மேகங்கள் சூழ்ந்து காணப்படும். ஆனால் மின்விசிறி இல்லாமல் கொஞ்ச நேரம் கூட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருக்க முடியாது. இதற்கான காரணமும் பலருக்கும் தெரியாமல் இருக்கும். மரங்கள் போதிய அளவு இல்லாத சென்னையில், கான்கிரீட் காடு தான் இருக்கிறது. சென்னையின் முக்கிய பகுதிகளில் மரங்களை பார்ப்பதே அரிதாகவிட்டது. இதுகூட வெப்பம் அதிகமாக இருப்பதுபோல் உணர காரணமாக இருக்கும் என்று தெரிகிறது.
உங்கள் மொபைலில் லோக்கேசன் ஆன் செய்து வைத்திருக்கீர்களா.. அப்படி ஆன் செய்து வைத்திருந்தால் அதில் எந்த ஊரில் உள்ளீர்களோ அந்த ஊரின் வானிலையை கூகுள் உங்களுக்கு காட்டும். அதில் சென்னையில் இரவு 1 மணி அளவில் பார்த்த போது, 30 டிகிரி செல்சியஸ் என்று காட்டியது. 30 என்றால் குறைவு தானே ஏன்வெப்பமாக இருக்கிறது என்று பார்த்தால்,30 தான் என்றாலும், 38 டிகிரி பாரன்ஹீட் போல் இருக்கும் என்று கூகுள் காட்டியது. கூகுள் சொல்வது போலவே வீடு புழுக்கமாக இருந்தது.
அதேபோல் இரவு 8.45 மணி அளவில் பார்த்த போது சென்னை வானிலை 31 டிகிரி செல்சியஸ் என்று காட்டியது. அதற்கு கீழ் 40 டிகிரி செல்சியஸ் போல் உள்ளது என்று காட்டியது. உண்மையில் 40 டிகிரி செல்சியஸ் போல் தான் வெப்பம் நேற்று இரவு சென்னையில் இருந்தது. இதேபோல் மாலை 4.40க்கு நேற்று பார்த்த போது சென்னையில் வெப்பநிலை 34 டிகிரி செலசியஸ் என்று காட்டியது. ஆனால் 45 டிகிரி செல்சியஸ் போல் இருப்பதாக காட்டியது.
கூகுள் காட்டியது போலவே வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. முன்னதாக சில நாட்களுக்கு முன்பு தேனியில் இருந்த போது, அங்கு வெப்பநிலை 29 டிகிரி என்றால், 23 போல் இருப்பதாகவும் காட்டியது. கோவை, திருப்பூரிலுமே மழை பெய்த காலத்தில் வெப்பநிலை உள்ளதைவிட குறைவாகவே காட்டியது. மரங்கள் காடுகள் அதிகம் உள்ள பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக இருந்தாலும் குறைவாக இருப்பது போல் உணர வைக்கும். ஆனால் காடுகளை இழந்த சென்னை, வெப்பம் கொஞ்சம் வந்தாலும் தாங்க முடியாமல் தவிக்கிறது என்பதை உணர முடிந்தது.












Click it and Unblock the Notifications