தத்தளிக்கும் சேலம்.. 1 மணி நேர மழைக்கே மூழ்கிய சாலைகள்.. கொந்தளிக்கும் மக்கள்
சேலம்: தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து, சேலத்தில் பல்வேறு பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த பேய் மழையால் பல்வேறு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே நேற்று தொடங்கி வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வரும் அக்டோபர் 16 ஆம் தேதி சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுந்த தாழ்வுப் பகுதியாக வலுவலடைந்து வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி அதற்கடுத்த 48 மணி நேரத்தில் நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நேற்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நேற்று கோவை மாவட்டத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டித் தீர்த்தது. அதேபோல, சேலத்திலும் கனமழை வெளுத்து வாங்கியது. லேசாக பெய்யத் தொடங்கிய மழை சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறி வெளுத்துக் கட்டியது. குறிப்பாக, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, பச்சப்பட்டி, கிச்சிபாளையம், முகமதுபுரா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை வெளுத்து வாங்கியது.
மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கி கடல்போலக் காட்சியளித்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் முகமதுபுரா பகுதிகளில் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். கழிவுநீரோடு சேர்ந்து மழைநீரும் வீடுகளுக்குள் புகுந்தது. கடைகள், வீடுகள் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் புகுந்தது.
இதனால், சேலம் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்தோடியதால் கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை மழை நீரில் சிக்கி தத்தளித்தன. வாகன ஓட்டிகள் பலர் வாகனங்களில் இருந்து கீழே விழுந்த காயமடைந்தனர். கிச்சிபாளையம் பகுதியில் மழை பெய்தாலே அந்தப் பகுதியில் இருந்து வெளியில் வருவது சிரமம். பல ஆண்டுகளாக இங்கு இந்தப் பிரச்னை உள்ளது. ஆனால், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
இதனால், 2, 3 ஊர்களைச் சுற்றி ஊருக்குள் சென்று வருகிறோம். 1 மணி நேரம் பெய்த மழைக்கே இந்த நிலை என்றால் இரவு முழுக்க பெய்தால் என்ன ஆகும். இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் குமுறி வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கிச்சிபாளையம் பகுதியில் 1 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. வழக்கமாக மழை பெய்தால் 15 நிடம் முதல் அரை மணி நேரத்துக்குள் வடிந்துவிடும். ஆனால், 1 மணி நேரத்துக்கு மேலாகியும் தண்ணீர் அதிகமாகவும், விரைவாகும் சென்று கொண்டே இருக்கிறது. முழங்கால் வரைக்கும் சாலைகளில் தண்ணீர் செல்கிறது.
வழக்கத்துக்கு மாறாக தண்ணீர் சென்று கொண்டே இருக்கிறது. இந்த வழியாக ஆட்கள் சென்றால் அடித்துக் கொண்டே போய்விடும். இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர் என்றனர்.












Click it and Unblock the Notifications