சென்னையை சூழ்ந்த வெள்ளம்.. பேருந்து போக்குவரத்தில் மாற்றம்.. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், பேருந்துப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகரப் பேருந்துப் போக்குவரத்து அறிவித்துள்ளது.
சென்னையில் இன்றும், நாளையும் கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய பல்வேறு பகுதிகளில் பலத்த இடி, மின்னலுடன் கூறிய கன மழை பெய்தது. இதனால், பல இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. அதிகாலையில் மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் சென்னையில் இன்று காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

அதன்படி, கோடம்பாக்கம், வடபழனி, வள்ளுவர் கோட்டம், எழும்பூர், அண்ணா நகர், திருமங்கலம், முகப்பேர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. வேளச்சேரி, முடிச்சூர், தரமணி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளையும் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறி வருகின்றனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிகளுக்கு முன்னதாகவே பாதி வழிகளில் பேருந்துகள் நிறுத்தும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் தாழ்தள பேருந்துகள் இயக்கப்பட்டால் பேருந்துகளுக்குள் மழை நீர் புகும் அபாயம் ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தாழ்தள பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இதேபோல, அம்பத்தூர், ஆவடியில் இருந்து கிண்டி செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிறுத்தவும், தாம்பரத்தில் இருந்து செங்குன்றம் செல்லும் பேருந்துகள் அம்பத்தூர் அல்லது அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னையில் உள்ள முக்கிய சுரங்கப் பாதைகளான பெரம்பூர் சுரங்கப்பாதை, முரசொலி மாறன், மேட்லி சுரங்கப் பாதை உள்ளிட்டப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதிகளிலும் பேருந்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சுதந்திர தின பூங்கா முதல் நாகாஸ் வரை வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் மழை நீர் சாலைகளில் தேங்கியுள்ளதால் பெரியார் சாலை, நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் செல்லும் பயணிகள் 104சி, 104சிஎக்ஸ் தடத்தைப் பயன்படுத்துமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பெருங்குடி, கந்தன்சாவடி, ஓஎம்ஆர் பகுதிகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications