பள்ளிகளுக்கு லீவு தரும் அளவுக்கு கன மழை காத்திருக்கிறது.. வெதர்மேன் சொன்ன தகவல்
சென்னை: சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவுக்கு கனமழை காத்திருக்கிறது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அது எந்த நாளில் என்பது குறித்து அவர் ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக தகவலை கொடுத்துள்ளார்.
தென் மேற்கு பருவமழை விலகிய நிலையில் தற்போது தமிழகம், புதுவை, தெற்கு ஆந்திராவுக்கு பயனை தரும் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. அக்டோபர் 2ஆவது வாரத்தில் தொடங்கும் என கணிக்கப்பட்ட நிலையில் இந்த சீசன் நாளையே தொடங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதுவும் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதிலும் சென்னையிலிருந்து நெல்லூர் வரை மழை காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பொதுவாக வடகிழக்கு பருவமழை என்றாலே பள்ளி மாணவர்கள் விடுமுறையைத்தான் எதிர்பார்ப்பார்கள். அதிலும் 2015 பெருவெள்ளத்தின் போது வானிலை ஆய்வு மைய இயக்குநராக இருந்த ரமணன் டிவியில் நேரலையில் வந்தாலே மாணவர்களுக்கு குஷியாகிவிடும். அந்த வகையில் கடந்த ஆண்டும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அதிக மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் வீடுகள், பள்ளிகள், சாலைகளில் தண்ணீர் சூழ்ந்த நிலையில் பள்ளிகளுக்கு ஒரு வாரத்திற்கு மேல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு மழை எப்படி இருக்கும் என்பது குறித்து வெதர்மேன் சிலவற்றை கணித்துள்ளார். அதில் அக்டோபர் 14 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை வங்கக் கடலில் ஏற்பட போகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வடதமிழகத்தில் கனமழை பெய்யும். அதிலும் குறிப்பாக KTCC என சொல்லப்படும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அருகே நல்லத் தொரு வெப்பச்சலனம் ஏற்பட போகிறது. இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வடதமிழகம், தென் ஆந்திராவில் தீவிரமடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறும். பிறகு காற்றழுத்தமாகவும் மாறும்.
எனவே புதுவை- சென்னை- நெல்லூர்- காவாலி பகுதிகளில் கனமழை பெய்யும். 14 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை கனமழை பெய்யும். ஆனால் எப்போது மழை பெய்ய தொடங்கும் என்பது குறித்து சொல்வது சற்று கடினமானது. ஆனால் இந்த 4 நாட்களில் ஒரு நாளாவது நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது.
ஒரு வேளை அந்த குறைந்த காற்றழுத்த வடதமிழகத்திற்கு அருகே வந்தால் இந்த 3 முதல் 4 நாட்களும் நல்ல மழை பெய்யும். இந்த காலகட்டத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை அன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய 4 மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை இன்று பெய்யும். திங்கள்கிழமை முதல் நல்ல மழை பெய்யும் என கணித்துள்ளார்.
இந்த ஹாட்ஸ்பாட் குறித்து அவர் கூறியுள்ளதால், சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பிருக்கிறதா என ஒன் இந்தியா சார்பில் கேட்ட போது பிரதீப் ஜான் கூறியதாவது: நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. 14 ஆம் தேதி இல்லாவிட்டாலும் 15 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications