வெயிலுக்கு இனி லீவு.. ஏசிக்கு ரெஸ்ட் கொடுக்கலாம்.. தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த "ஜில்" அப்டேட்
சென்னை: ஏப்ரல் - மே மாதம் திரும்பி விந்துவிட்டதோ என்று நினைக்கும் வகையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இனி வெயில் குறைந்து மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஏப்ரல்- மே மாதம் திரும்பி விந்துவிட்டதோ என நினைக்கும் வகையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பகல் நேரத்தில் காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வெயிலின் உக்கிர தாண்டவம் அதிகமாக இருந்தது. வீட்டை விட்டு வெளியில் சென்றாலே வியர்வையில் குளித்துவிட்டுத்தான் வரக்கூடிய அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

நேற்று மதுரையில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. வழக்கமாக செப்டம்பர் மாதத்தில் அதிகபட்சம் 35.7 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே வெப்பநிலை இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் 40 டிகிரி வரை உள்ளது. சென்னை உள்ளிட்ட நகர பகுதிகளில் வீட்டில் ஏசி, மின் விசிறி இல்லாமல் இருக்க முடியாத நிலையே இருந்தது. கடந்த மாதம் வரை அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வெயிலின் தாக்கம் தணிந்து இருந்ததது.
ஆனால், இந்த செப்டம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் இன்று வழக்கத்தை விட வெப்பம் 7 டிகிரி வரை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை மையம் கூறியிருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று முதல் ஆங்காங்கே லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இந்த மாத இறுதியில் வங்க கடலில் உருவாகும் சுழற்சி காரணமாக பரவலான மழை பெய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று அதிகாலையிலே திடீரென மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குறிப்பாக தென் சென்னை, மத்திய சென்னை பகுதிகளில் சில இடங்களில் நல்ல மழை பெய்தது. கிண்டி, அமைந்தகரை, வடபழனி, எழும்பூர், மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம், ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் தாலுகாக்களை உள்ளடக்கிய பகுதிகளில் மழை பெய்தது. அதிகாலை 3 மணி அளவில் சென்னையில் மழை தொடங்கியது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இந்த திடீர் மழை பெய்துள்ளது. திடீர் மழையால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications