ஃபெஞ்சல் புயல்.. சூறைக் காற்றுடன் கொட்டிய கனமழை.. புதுவையில் மட்டும் பதிவான மழை அளவு எவ்வளவு பாருங்க
சென்னை: ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த போது 90 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. விழுப்புரம், கடலூர், புதுவையில் கனமழை வெளுத்து வாங்கியது. இதில் அதிகபட்சமாக புதுவையில் 30 செமீ மழை பதிவாகியது. இதேபோன்று விழுப்புரம் வானூரில் 23 செமீ மழை பதிவாகியது. சென்னையை பொறுத்தவரை 12 மணி நேரத்தில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 15 செமீ மழை பதிவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் கடந்த 23 ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், அதனைத்தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்தது. புயலாக மாறும் என்று கணிக்கபட்டது. ஆனால், போக்கு காட்டி வந்த இந்த புயல், ஒருவழியாக கடந்த 29-ம் தேதி புயலாக வலுப்பெற்றது.

'ஃபெஞ்சல்' என பெயரிடப்பட்ட இந்த புயல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் புயல் நகர்ந்து வரும் வேகம் அடிக்கடி மாறிக்க்கொண்டே இருந்தது. இதனால், நேற்று காலையில் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், கரையைக் கடக்க மாலை ஆனது. இதன்படி, நேற்று மாலை 5.30 மணிக்கு கரையைக்கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல் இரவு 11.30 மணியளவில் கரையக் கடந்தது.
புயல் கரையைக் கடக்கும் போது, மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசியது. ஃபெஞ்சல் புயலினால் கடந்த சில தினங்களாகவே விட்டு விட்டு கனமழை பெய்து வந்தது. புதுவை, காரைக்கால் கடல் பகுதி வழக்கத்துக்கு மாறாக கொந்தளிப்புடன் காணப்பட்டது. நேற்றும் கடல் அலைகள் 6 அடிக்கு மேல் எழுந்து சீறிப்பாய்ந்தன.
நேற்று காலை முதல் விடாமல் மழை பெய்ததால், புதுவையின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளக்காடானது. குறிப்பாக புயல் கரையை கடந்த போது 90 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. மேலும் விழுப்புரம், கடலூர், புதுவையில் கனமழை வெளுத்து வாங்கியது. இதில் அதிகபட்சமாக புதுவையில் 30 செமீ மழை பதிவாகியது. இதேபோன்று விழுப்புரம் வானூரில் 23 செமீ மழை பதிவாகியது. திண்டிவனத்தில் 16 செமீ, மரக்காணம் 15 செமீ, மேல்மலையனூர் 12 செமீ, விக்கிரவாண்டியில் 11 செமீ மழை பெய்தது.
இதேபோன்று ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் நேற்று காலை 8.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரையிலான 12 மணி நேரத்தில் 15 செமீ மழை பெய்துள்ளது. பேசின் பிரிட்ஜில் 14 செமீ மழையும், வலசரவாக்கத்தில் 13.5 செமீ மழையும், வடபழனியில் 13.38 செ.மீ மழையும், திருவொற்றியூர் - 13.35 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
புதுவையின் நாவற்குளம் பகுதி நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த 100 பேர் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. இவர்கள் தவிர புதுவையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய நலக்கூடம், திருமண மண்டபங்களில் 1,500-க்கும் மேற்பட்டோர் தஞ்சமடைந்தனர். அவா்களுக்கும் உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டன.
புயல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் கிழக்கு கடற்கரை சாலை வழித்தடத்தில் உள்ள மரக்காணம், கடப்பாக்கம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிப்புக்குள்ளாயினர். மரக்காணத்திலும் கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications