முதலில் சென்னை, இப்போது தென்மாவட்டங்கள்.. ஒரே நாளில் இடைவிடாமல் அதீத கனமழை வெளுப்பது ஏன்?
செனனை: முதலில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை வெளுத்த மழை, இப்போது தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் சிக்கல் என்னவென்றால், ஒரே நாளில் அல்லது தொடர்ந்து 36 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை அதீத கனமழை விடாமல் பெய்வது தான். திடீரென இப்படி அதீத கனமழை வெளுக்க என்ன காரணம் என்பதை பார்ப்போம்.
வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயல் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து 36 மணி நேரம் அதி கனமழையை கொட்டித்தீர்த்தது. இந்த வெள்ளம் வடிய வழி இல்லாததால், சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். வாழ்வாதாரத்தை தொலைத்த மக்கள், இன்னும் அந்த பாதிப்பில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறார்கள்.

இந்த சூழலில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று பெய்த கனமழை தென் மாவட்ட மக்களை வெள்ளத்தில் தத்தளிக்க வைத்துள்ளது.
சென்னையில் மழை வருவதற்கு மிக்ஜாம் புயலும், அது சென்னை வழியாக கடந்து சென்றதும் காரணம் என்றால், தென்மாவட்டங்களில் புயல் எதுவும் இல்லை.. ஆனால் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவே இப்படி ஒரு பேய் மழை பெய்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில், அறிவித்தபடியே, 4 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக மழை பெய்ய ஆரம்பித்தது.
முதலில் மிதமாக ஆரம்பித்த மழை, நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக மாறியது. நேற்று அதிகாலை முதலே 4 மாவட்டங்களிலும் தொடர் மழையாக மாறி வெளுத்தது. இந்த வார்த்தைகளை எங்கேயோ கேட்டது போல் உங்களுக்கு இருக்கிறதா.. டிசம்பர் 3ம் தேதி ஞாயிறு அன்று எப்படி மழை ஆரம்பித்ததோ, அப்படித்தான் முதலில் பரவலாக மழை பெய்தது. அதன்பிறகு எப்படி டிசம்பர் 4ம் தேதி திங்கள் அன்று மழை பெய்ததோ அதுபோல் , நெல்லையை சுற்றியுள்ள மாவட்டங்களில் சனிக்கிழமை பரவலாக ஆரம்பித்த மழை, ஞாயிறு அதிகாலை முதல் இடைவிடமால் கொட்டியது. 5 செமீ மற்றும் 10 செமீ மழை எல்லாம் இல்லை. சென்னையில் பெய்ததை விட மிகமிக அதிகமாக பெய்தது. அதாவது ஒரே நாளில் 48 செமீ, 50 செமீ மழை பெய்திருக்கிறது. இந்த மழை எல்லாம் சென்னையில் விழுந்திருந்தால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத பேரிழப்பு ஏற்பட்டிருக்கும். அந்த அளவிற்கு பேய்மழை இடைவிடாமல் பெய்திருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான மணிமுத்தாறு அணை, பாபநாசம் அணை, அதனுடன் இணைந்த சேர்வலாறு அணை பகுதிகளிலும் அதிக அளவில் மழை பெய்த காரணத்தால் மணிமுத்தாறு அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதேபோல் பாபநாசம் அணை மற்றும் சேர்வலாறு அணைகளுக்கு வினாடிக்கு 25 ஆயிரத்துக்கு மேல் தண்ணீர் வந்தது. இரு அணைகளில் இருந்தும் உபரிநீர் திறந்துவிடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் ஓடுகிறது. இந்த நீர் ஆற்றங்கரையோர கிராமப்பகுதிகளிலும் புகுந்திருக்கிறது. நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் மூழ்கடித்துவிட்டது. நெல்லை சேவியர் காலனி, பாளையங்கோட்டை, டவுன் உள்ளிட்ட பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தூத்துக்குடி, சாத்தான்குளம், திருச்செந்தூர் தண்ணீரில் தத்தளிக்கின்றன.
மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவிகளில் காட்டாற்று வெள்ளம் பார்ப்போரை பயமுறுத்தியது. கன்னயாகுமரி மாவட்டத்திலும் மழை இடைவிடாமல் பெய்தது. நாகர்கோவில், பூதப்பாண்டி, கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் வெள்ளத்தத்தில் தத்தளிக்கிறது. இந்த தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டிருக்கிறது.
ஏன் இப்படி பேய் மழை: பொதுவாக மழை என்பது பரவலாக இருக்கும். ஏதாவது ஒரு சில ஆண்டுகளில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மழை பெய்யும். அப்படித்தான் இந்தாண்டு மழை பெய்துள்ளது. முதலில் சென்னையிலும், இப்போது நெல்லை பகுதியிலும் மழை பெய்துள்ளது. பல நாட்கள் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் விழுக எல்லினோ பாதிப்பு தான் காரணம். பருவ நிலை மாறுபாடு காரணமாகவே இப்படி மழை பொழிவு ஏற்படுகிறது.
அதேநேரம் இந்திய பெருங்கடலில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றமே இப்படியான மழைகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதீத கனமழை பெய்வதற்கு காரணம் மேகங்கள் இந்திய பெருங்கடல் பகுதிகளில் வந்திருக்கிறது. இதன் காரணமாகவே இந்த முறை தமிழ்நாட்டில் வழக்கத்தைவிட அதிக கனமழை பெய்திருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications