தலைக்கு தில்லை பாருங்க! ஆறு போல் ஓடும் வெள்ள நீர்.. வெறும் டியூப் கட்டி அசால்ட்டாக நீந்திய நபர்
தூத்துக்குடி: ஆறு போல் இருக்கும் வெள்ள நீரில் வெறும் லாரி டியூப்பை கட்டிக் கொண்டு கரை சேர்ந்திருக்கும் நபரை பார்த்து அங்கு சூழ்ந்திருந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெய்த பேய் மழையால் ஊரெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பல்வேறு கிராமங்களை தொடர்பு கொள்ள முடியாத சூழல் இருந்து வருகிறது.

பல்வேறு அணைகள், ஆறுகளில் இருந்து பெருவெள்ளம் ஊருக்குள் வந்துவிட்டது. இதனால் மக்கள் கழுத்தளவு தண்ணீரில் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் அவர்களின் வீட்டிலிருந்த தட்டுமுட்டு சாமான்கள், மளிகை சாமான்கள், அரிசி மூட்டைகள் எல்லாம் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
இதனால் 3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் , குடிநீர், உணவு இல்லாமல் தத்தளித்து வருகிறார்கள். பல இடங்களில் மீட்பு குழுவினர் கூட நுழைய முடியாத நிலை உள்ளது. பல கிராமங்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பேரூர் என்ற கிராமத்தை சுற்றி வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
அந்த கிராமத்திற்கு செல்லும் பாதையில் காட்டாற்று வெள்ளம் ஆறு போல் ஓடி கொண்டிருக்கிறது. இதனால் அந்த ஊருக்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது கூட தெரியாத நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் அந்த ஆறு போல் தண்ணீர் தேங்கியுள்ள சுமார் 2 கி.மீ. தூரம் கொண்ட பகுதியை ஒருவர் கடந்து வந்துள்ளார்.
அவர் லாரி டயர் டியூப்பை கட்டிக் கொண்டு நீந்தியபடியே கரை சேர்ந்துள்ளார். அவர் பேரூரை சேர்ந்த காசி. அந்த கிராமத்தில் 1000 பேருக்கு மேல் இருக்கிறார்களாம். அவருக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருகிறார்கள் என்கிறார்.
மேலும் தான் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார் காசி. அவருடைய ஊர் மக்கள் எல்லாரும் நலமாக இருக்கிறார்கள் என்றார். மேலும் அவருடைய ஊருக்கு வர சாதாரண படகு போதாது என்றும் மோட்டார் படகு இருந்தால் அங்கிருக்கும் மக்களை மீட்டெடுக்கலாம் என்கிறார். அவர் 2 கி.மீ. தூரம் நீந்தியே கரைக்கு வந்ததும் பயங்கரமாக மூச்சு வாங்கியது.












Click it and Unblock the Notifications