நாளை வருது அரசாணை.. வெள்ள நிவாரணம் யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம் தெரியும்: முக்கிய தகவல்!
சென்னை: புயல் வெள்ள நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பான அரசாணை நாளை வெளியிடப்படும் என்றும் தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
சென்னையில் மழை வெள்ளம் சூழ்ந்த பள்ளிக்கரணை, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வெள்ள நிவாரணப் பணிகளை, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், "சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழு நாளை வருகிறது. செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் அவர்கள் ஆய்வு செய்கின்றனர்.

தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் ஆலோசகர் குணால் சத்யார்தி தலைமையில் ஒரு குழு வருகிறது. அந்த குழுவில் 5 பேர் இடம்பெற்றுள்ளனர். வேளாண்மை, நெடுஞ்சாலை, நிதி, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த 5 பேர் வருகின்றனர். திங்களன்று மாலை வந்துவிட்டு, செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட உள்ளனர்" எனத் தெரிவித்தார்.
அப்போது சென்னையின் தற்போதையை நிலை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சிவ்தாஸ் மீனா, "சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது. அத்தியாவசியப் பொருட்கள், பால் விநியோகம், குடிநீர், போக்குவரத்து என அனைத்தும் சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டது. குடிநீரை பொறுத்தவரை, குழாய்கள் மூலம் வழங்கப்படும் தண்ணீரும், லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. அனைத்துப் பகுதிகளிலும் மின் விநியோகம் சீரான நிலையில் உள்ளது.
இப்போது இருக்கும் ஒரே சவால், குப்பைகள். டிசம்பர் 3ஆம் தேதி முதல் டிச.5ம் தேதி வரை, புயலின் காரணமாக கனமழை இருந்தது. இதனால், டிசம்பர் 6ஆம் தேதியில் இருந்துதான், குப்பைகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. அந்த 3 நாட்களில் வந்த குப்பைகள், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், சேதமடைந்த குப்பைகளும் சேர்ந்துவிட்டது. தனித்தனி குழுக்கள் அமைத்து குப்பைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. அதேபோல், தெருக்களில் மழையால் ஏற்பட்ட சேறு சகதிகளை அகற்றுவதும், அந்தப் பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் தூவும் பணிகளும்தான், தற்போது போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. நாளைக்குள் இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவுறும்.
நாளை முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. கடந்த மூன்று நாட்களாக பள்ளி, கல்லூரிகளில் உள்ள சேறு சகதிகள், மரங்கள் அகற்றுதல், கட்டிடங்களை ஆய்வு செய்தல், கழிவறைகளை சுத்தம் செய்தல், குடிநீர் வசதிகளை ஏற்படுத்துதல், உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளோம். நாளை முதல் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்றார்.
நாளை அரசாணை வெளியிடப்படும்: தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள புயல் வெள்ள நிவாரணத் தொகை வழங்க டோக்கன் ஏதாவது விநியோகிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, "நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும். அதுதொடர்பான அரசாணை நாளை வெளியிடப்படும். அதில் மற்ற விவரங்கள் அனைத்தும் இடம்பெறும்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இன்னும் ஒரே வாரத்தில் நிவாரண தொகை வழங்கும் பணிகள் தொடங்கப்படும். ஒரு வாரத்தில் நிவாரண தொகையைக் கொடுக்க ஆரம்பித்துவிடுவோம். முதல் வாரத்தில் டோக்கன் வழங்குவோம். அடுத்து நிவாரண தொகையை வழங்க ஆரம்பித்துவிடுவோம். சில இடங்களில் ரேஷன் கடைகளிலேயே தண்ணீர் தேங்கி இருக்கிறது. அதேபோல சில பொருட்களும் சேதமடைந்துள்ளன. அந்த நீரை அகற்றிவிட்டு, சேதங்களைச் சரி செய்துவிட்டு நிவாரண தொகை வழங்குவோம். முதலில் டோக்கன் வழங்கப்பட்டு, அதன் பிறகு ஒரு வாரத்தில் நிவாரண தொகை வழங்குவோம்." எனத் தெரிவித்தார்.
யாருக்கெல்லாம் கிடைக்கும்?: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6000 வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிவாரணம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும், தனிநபர் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கும் இந்த ரூ.6,000 புயல் வெள்ள நிவாரணம் வழங்குவது அரசின் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. நிவாரணம் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிடவுள்ள அரசாணையில் முழுமையான வழிகாட்டுதல் இடம்பெறும்.












Click it and Unblock the Notifications