அடுத்த 3 மணி நேரத்தில்.. இந்த 9 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகும் மழை.. வானிலை மையம் ஜில் அப்டேட்
சென்னை: இந்தாண்டு மே மாதம் வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் குறைவாகவே இருக்கிறது. பருவமழை முன்கூட்டியே தொடங்கிவிட்ட நிலையில், மழையும் கூட கணிசமாகப் பெய்தே வருகிறது. இதற்கிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாகக் கோடைக் காலம் வெயில் உச்சத்தில் இருக்கும். ஆனால், இந்தாண்டு அதற்கு நேர்மாறான சூழலே நிலவுகிறது. மே மாதம் தொடங்கியது முதலே பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. அவ்வளவு ஏன் அதிசயமாகச் சென்னையில் கூட மழை பெய்தது. இதனால் இந்தாண்டு கோடைக் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைவாகவே இருந்தது.

பருவமழை
அதேபோல இந்தாண்டு பருவமழையும் கூட முன்கூட்டியே தொடங்குகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாகத் தமிழகத்தின் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் கணிசமாக மழை பெய்யும். இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரம் சம்பவம்
இரவு 7 மணி நேரம் தென்காசி, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகச் சாலைகளில் நீர் தேங்கலாம் என்றும் டிராபிக் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மழை கொட்டும்
முன்னதாக இன்று வானிலை மையம் வெளியிட்டிருந்த தினசரி செய்திக்குறிப்பில், "இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளைய தினம் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (23-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (24-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications