நெருங்கும் சுழல்.. 180 வெள்ள அபாய பகுதிகள்! சென்னை மாநகராட்சி முக்கிய உத்தரவு!
சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து வருகிறது. இந்நிலையில், சென்னை உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளை மாநகராட்சி அடையாளம் கண்டிருக்கிறது. இந்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் உத்தரவிட்டிருக்கிறது.
வடகிழக்கு பருவமழை எப்போதும் சென்னைக்கு தலைவலிதான். போதாத குறைக்கு இந்த முறை, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் சேர்ந்திருக்கிறது. இது இரண்டும் சேர்த்து கடந்த ஒரு வாரமாக மழையை அதிக அளவில் கொட்டி வருகிறது. காலை வெயிலுடன் விடியும் வானம், மாலை கனமழையுடன் முடிவடைகிறது. மழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று விடுத்திருந்த அறிக்கையில்,

"தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 14 ஆம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும். தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த நான்கு தினங்களில் விலகும் நிலையில், கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில், 15 16 ஆம் தேதி வாக்கில், வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல, இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நாளை வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அறிவிப்பு காரணமாக சென்னையில் வெள்ளம் தேங்கும் அபாயம் எழுந்திருக்கிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தை நோக்கி நெருங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 43 இடங்களில் உள்ள மழைநீர் வடிகால்களில் இணைப்புப் பணி நிறைவடையாததால், பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. சென்னையில் மழைநீர் தேங்கக்கூடிய 25 இடங்கள் உட்பட 180 வெள்ள அபாய பகுதிகள் கண்டறியப்பட்டு கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications