கொளுத்துதே! இப்பவே சுட்டெரிக்கத் தொடங்கிய சூரியன்.. ஈரோட்டில் இன்று உச்சம்.. ஆஹா.. உஷார் ஆகுங்க!
ஈரோடு: தமிழ்நாட்டில் தற்போது வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் வெயில் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
தமிழ்நாட்டில் இன்னும் சில வாரங்களில் கோடை காலம் தொடங்க இருக்கிறது. எனினும் தற்போதே கோடை காலம் தொடங்கியது போல பல இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் தற்போது காற்றில் ஈரப்பதத்தின் அளவு குறைந்து வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது.

ஈரோட்டில் கொளுத்தும் வெயில்: அந்தவகையில், இன்றும் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் அனலைக் கக்கியது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. ஈரோட்டில் கடுமையான வெயிலின் தாக்கத்தால், பொதுமக்கள் மதிய நேரத்தில் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக ஈரோடு மாவட்டத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போதே வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருவது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பகலில் வெயில், இரவில் பனிக்காற்று: மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க கரும்பு ஜூஸ், இளநீர், குளிர்பானங்களை விரும்பி பருகி வருகின்றனர். பின்னர் இரவு நேரத்தில் பனியன் தாக்கம் தொடங்கிவிடுகிறது. ஒரே நாளின் மாறுபட்ட காலநிலை காரணமாக ஏராளமானோருக்கு சளி, இருமல் பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வெப்பநிலை இன்னும் அதிகரிக்கும்: ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. வரும் பிப்ரவரி 20 முதல் 23ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மேலும் 24ஆம் தேதியன்று கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இன்று தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications