சென்னையில் கேட்ட "திடுக்" சத்தம்.. வெயில் இந்த அளவுக்கு மோசமாகிவிட்டதா? அலறிய மக்கள்.. ஷாக்
சென்னை: சென்னையில் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக கட்டுமான தொழிலாளி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கும் அளவிற்கு மோசமான வானிலை நிலவி வருகிறது.

பெரும்பாலான இடங்களில் தமிழ்நாட்டில் 38-39 டிகிரி செல்ஸியஸ் நிலவி வருகிறது. மற்ற சில இடங்களில் 42°C மற்றும் அதற்கு மேல் வெப்பநிலை நிலவுகிறது. உதாரணமாக வேலூர் :43.2°C (+4.0°C) & திருச்சி: 42.1°C (+3.7°C),. திருப்பத்தூர், திருத்தணி, தருமபுரி, மதுரை நகரம் & விமான நிலையம், பாளையங்கோட்டை, சேலம், நாகப்பட்டினம், சென்னை (எம்பிகே) மற்றும் தஞ்சாவூரில் 40-42 டிகிரி செல்சியஸ் நேற்று பதிவானது.
தமிழகத்தின் மற்ற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36°C முதல் 40°C வரையிலும், மலைப்பகுதிகளில் 24°C முதல் 29°C வரையிலும் பதிவாகியுள்ளது. சென்னையில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை (மடிப்பாக்கம் :40.1°C, +3.0°C மற்றும் நுங்கம்பாக்கம் : 37.3°C, +1.2°C) பதிவானது.
ஹீட் ஸ்ட்ரோக்: இந்த நிலையில்தான் சென்னையில் கட்டுமானப் பணியின் ஏற்பட்ட ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக உடல் பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளி பலியாகி உள்ளார். உ.பியை சேர்ந்த சச்சின் மீஞ்சூர் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். சென்னை மீஞ்சூரில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார்.
இவர் கட்டுமான பணியில் ஈடுபடும் போதே மயங்கி விழுந்துள்ளார். இந்த நிலையில் அவருடன் வேலை பார்த்தவர்கள் அலறியபடி அவரை தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். நீண்ட நேரம் வேலை பார்த்த நிலையில் மயங்கி விழுந்து பின்னர், ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு பலியாகி உள்ளார்.
ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன?: ஹீட் ஸ்ட்ரோக் என்பது கடுமையான வேலை காரணமாக உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு, இதயம் தொடங்கி பல்வேறு உறுப்புகள் செயல் இழப்பது ஆகும். அதிக வெப்பநிலை மற்றும் கடுமையான சூடு ஆகியவற்றுள் நீண்டகாலம் இருந்தால் உடலின் வெப்பநிலை ஒழுங்குமுறை அமைப்பு செயல் இழப்பதை குறிக்கும்.
அதாவது உடலின் சூட்டை தணிக்கும் பல்வேறு பாகங்கள் மொத்தமாக செயல் இழந்து உறுப்பு பாதிப்புகள் ஏற்பட வழி வகுக்கும்.
ஹீட் ஸ்ட்ரோக் பொதுவாக உடலின் மைய வெப்பநிலை 104°F (40°C) அல்லது அதற்கு மேல் உயரும் போது ஏற்படும். வெப்ப பக்கவாதம் இதனால் உருவாகலாம். பெரும்பாலும் இதற்கு உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறது.

வெப்ப பக்கவாதம் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன:
கிளாசிக் ஹீட் ஸ்ட்ரோக்: இந்த வகை பொதுவாக வயதானவர்கள், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சில மருந்துகள் அல்லது மருத்துவ நிலைமைகள் காரணமாக உடல் வெப்பத்தை கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கு ஏற்படுகிறது. அதிக வெப்பநிலை வெளிப்படும் நாட்களில் இது பெரும்பாலும் படிப்படியாக அதிகரிக்கும் . நீரிழப்பு மற்றும் உடல் வெப்பநிலை இதனால் அதிகரித்து மரணத்தை ஏற்படுத்தும்.
எக்ஸர்ஷனல் ஹீட் ஸ்ட்ரோக்: இந்த வகை பொதுவாக விளையாட்டு வீரர்கள் மற்றும் சூடான சூழலில் கடுமையான உடல் செயல்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு ஏற்படுகிறது. குறிப்பாக போதுமான நீரேற்றம் மற்றும் குளிரூட்டும் செயல்பாடுகளில் ஈடுபடாவிட்டால், சில நேரங்களில் இது ஏற்படலாம்.
வெப்ப பக்கவாதம் அல்லது ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக ஏற்படும் அறிகுறிகள்:
அதிக உடல் வெப்பநிலை (பொதுவாக 104°F அல்லது 40°Cக்கு மேல்)
மன குழப்பம், கிளர்ச்சி.
கண்களில் ஏற்படும் மாயத்தோற்றம் போன்ற போதையான நிலை.
சூடான, வறண்ட சருமம் (கிளாசிக் ஹீட் ஸ்ட்ரோக்கில்) அல்லது அதிக வியர்வை (எக்ஸர்ஷனல் ஹீட் ஸ்ட்ரோக்)
விரைவான இதயத் துடிப்பு மற்றும் ஆழமற்ற சுவாசம்
குமட்டல், வாந்தி மற்றும் தலைவலி
தசைப்பிடிப்பு அல்லது பலவீனம்
வலிப்புத்தாக்கங்கள் அல்லது சுயநினைவு இழப்பு
சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இந்த ஹீட் ஸ்ட்ரோக் உறுப்பு சேதம், மூளை காயம் மற்றும் மரணம் உள்ளிட்ட தீவிர சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே, வெப்பப் பக்கவாதத்தின் அறிகுறிகளைக் கண்டறிந்து, உடலைக் குளிர்விக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதும், மருத்துவ உதவியை நாடுவதும் முக்கியம்.












Click it and Unblock the Notifications