சென்னையை விடுங்க.. மதுரையையும் கொஞ்சம் பாருங்க! தத்தளிக்கும் மாநகரம்.. நீச்சல் மட்டும் தான் அடிக்கல!
மதுரை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே மதுரையில் இதுவரை இல்லாத வகையில் மழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், பல இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக் காடாக காட்சியளிப்பதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
சென்னையில் கடந்தாண்டு மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது, எப்போதும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் வேளச்சேரியில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதோடு மரங்களும் விழுந்தன.

குறிப்பாக இருசக்கர வாகனங்கள் கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஒரு வாரத்திற்கு மேல் மழை நீர் வடியாததால் ஏராளமான கார்கள் சேதம் ஆகின.
இந்நிலையில் இந்தாண்டு அக்டோபர் மாதத்திலேயே சென்னைக்கு கனமழை எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னரே வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவித்திருக்கப்பட்டிருக்கும் நிலையில் சென்னையில் 17ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்தது.
தொடர்ந்து மூன்று நாட்களாக சென்னையில் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகள் கனமழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டன. பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டது. இதனை அடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு போல மிகப்பெரிய பாதிப்புகள் இல்லை. இருந்த போதும் எதிர்பார்த்த மழையும் பெய்யவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தை பொருத்தவரை கடந்த ஆறு நாட்களாக காலை மாலை என இரண்டு நேரங்களிலும் அதிகப்படியான மழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்து வெள்ள காடாக காட்சியளிக்கிறது. முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் கோரிப்பாளையம், சிம்மக்கல், தல்லாகுளம், தமுக்கம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை காரணமாக பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
இதன் காரணமாக மழை நீரை உடனடியாக வெளியேற்ற மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது. சென்னையில் மட்டும் மழை பெய்யும் போது துரிதமாக பணிகளை மேற்கொள்ளும் அரசு தென்மாவட்டங்களிலும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவுக் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications