சென்னை மேகவெடிப்பு.. விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை.. மணலியில் ஒரு மணி நேரத்தில் 160 மி.மீ மழை!
சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. சுமார் 11 மணிக்கு மழை தொடங்கிய நிலையில் வடபழனி, கிண்டி, தியாகராய நகர், எழும்பூர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், பொன்னேரி, புதுக்கோட்டை, கூடலூர் உள்ளிட்ட இடங்களிலும் விடிய விடிய கனமழை கொட்டியது. சென்னையில் மணலி, அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் மேகவெடிப்பு போல மழை கொட்டித் தீர்த்தது.

சென்னையில் பல இடங்களில் ஒரு மணி நேரத்தில் 10.செ.மீக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. மணலியில் ஒரு மணி நேரத்தில் 16 செ.மீ என்ற அளவுக்கு பெருமழை கொட்டியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், பொன்னேரி, புதுக்கோட்டை, கூடலூர் உள்ளிட்ட இடங்களிலும் விடிய விடிய கனமழை கொட்டியது.
மேகவெடிப்பு
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், "நடப்பு ஆண்டில் சென்னையில் முதல்முறை மேகவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்தில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை கொட்டி தீர்த்துள்ளது. தென்சென்னையிலும் நிலைமை மாறி கொண்டிருக்கிறது. வடக்கு மற்றும் வடமேற்கு சென்னையில் பெய்த கனமழை போன்று தென்சென்னை பகுதியிலும் பலத்த மழை கொட்டித் தீர்க்கும்" என்று தெரிவித்தார்.
வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்றும் (ஆகஸ்ட் 31), நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். செப்.2 முதல் 5-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சென்னையில்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறை, சின்கோனா, சின்னக்கல்லார் ஆகிய இடங்களில் தலா 4 செமீ, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி, மாஞ்சோலை ஆகிய இடங்களில் தலா 3 செமீ, கோவை மாவட்டம் சோலையார், பொள்ளாச்சி, தேனி மாவட்டம் பெரியாறு, கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோடு ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications