மேம்பால கார் பார்க்கிங்.. நீங்க ஃபைன் போடுங்க! நாங்க காரை எடுக்க மாட்டோம்! உஷாரான வேளச்சேரி மக்கள்!
சென்னை: சென்னையில் அதிக கன மழை பெய்யக்கூடும் என்பதன் காரணமாக வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி மேம்பாலத்தில் பொதுமக்கள் தங்கள் கார்களை நிறுத்தி உள்ளனர். தொடர்ந்து போலீசார் கார்களுக்கு அபராதம் விதித்து வரும் நிலையில் அபராதம் விதித்தாலும் பரவாயில்லை கார்களை பாலத்தில் இருந்து எடுக்க மாட்டோம் என பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.
நவம்பர் - டிசம்பர் மாதங்கள் வந்துவிட்டாலே சென்னை வாசிகளுக்கு எப்போதும் ஒருவித பயம் தொற்றிக் கொள்ளும். காரணம் நவம்பர் டிசம்பர் மாதங்களில் சென்னையில் மழை வெள்ளம் காரணமாக பாதிப்பை சந்திப்பது வழக்கம்.

அந்த மாதங்களில் தான் சென்னைவாசிகள் பலத்த பாதிப்பை சந்திப்பார்கள். கடந்த ஆண்டு கூட டிசம்பரில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெரிய அளவில் மழை பெய்தது. பல இடங்களில் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியதால் பல இடங்களில் மக்கள் தத்தளித்தனர்.
குறிப்பாக எப்போதும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் வேளச்சேரியில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதோடு மரங்களும் விழுந்தன. குறிப்பாக இருசக்கர வாகனங்கள் கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஒரு வாரத்திற்கு மேல் மழை நீர் வடியாததால் ஏராளமான கார்கள் சேதம் ஆகின. இந்நிலையில் இந்தாண்டு அக்டோபர் மாதத்திலேயே சென்னைக்கு கனமழை எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என அறிவித்திருக்கப்பட்டிருக்கும் நிலையில் சென்னையில் நாளை மிக கனமழையும், நாளை மறுநாள் அதிக கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதை அடுத்து ஆலோசனை மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இதை அடுத்து வேளச்சேரி வாசிகள் தற்போதைய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் உடமைகளை பாதுகாக்கும் நெறிமுறைகளை கையாள தொடங்கியுள்ளனர். குறிப்பாக வேளச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வேளச்சேரி ரயில் நிலையம் எதிரே இருக்கும் மேம்பாலத்தில் தங்கள் கார்களை நிறுத்த தொடங்கியுள்ளனர். கடந்த வருடம் ஏராளமான கார்கள் பழுதானதால் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டி இருந்தது. இந்த நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் பாலத்தில் கார்களை பார்க்கிங் செய்ய இடம் கிடைக்காது என்பதால் இரண்டு நாட்கள் முன்பாகவே தற்போது வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை நிறுத்தி உள்ளனர்.
இதனால் இருபுறமும் நூற்றுக்கணக்கான கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதை அடுத்து போலீசார் அந்த கார்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். போக்குவரத்திற்கு இடையூறாக கார்களை நிறுத்த கூடாது என போலீசார் அறிவுறுத்தினாலும் அதனை கேட்காமல் பொதுமக்கள் கார்களை நிறுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக கார்கள் பழுதாகி ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டி இருந்தது. மேலும் காரின் ஸ்டியரிங்குக்கு மேலாக தண்ணீர் சென்றதால் இன்சூரன்ஸ் தொகையை கூட பெற முடியவில்லை.
பாதி விலைக்கு கார்களை விக்க வேண்டியதாகிவிட்டது. இந்த நிலையில் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது கார்களை மேம்பாலத்தில் பார்க்கிங் செய்து வருகிறோம். இதனால் போலீசார் அபராதம் விதித்தாலும் பரவாயில்லை. ஆயிரம் ரூபாய் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் செலுத்தினாலும் லட்சக்கணக்கில் வாங்கிய கார்களை காப்பாற்ற வேண்டியது நாங்கள் தான். இதனால் அபராதம் விதித்தாலும் கார்களை எடுக்கப் போவதில்லை. 5 நாட்களுக்கு சேர்த்து அபராதம் விதித்தாலும் 5000 ரூபாய் கட்ட தயாராக இருக்கிறோம். ஆனால் கார்களை எடுக்க மாட்டோம் என்கின்றனர் வேளச்சேரி வாசிகள்..












Click it and Unblock the Notifications