அடுத்த 3 மணி நேரம் தென் மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை.. வானிலை அலர்ட்! வாக்குப்பதிவை பாதிக்குமா?
சென்னை: தமிழகத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த சூழலில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. நேற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கோடை வெயில் தகித்து வருகிறது. வேலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானாலும் ஓட்டுப்பதிவில் எந்த தொய்வும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்து வருகிறது. தமிழக சட்டசபை தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் பிற்பகல் 3 மணிக்குள் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

அடுத்த 3 மணி நேரம்
தமிழகத்தில் நேற்று கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. இந்த நிலையில் இன்றும் மழை கொட்டும் என வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக அடுத்த 3 மணி நேரத்தில் நெல்லை, தென்காசி, குமரி ஆகிய 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை வெளுக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.
இன்று இரவு 7 மணி வரை நெல்லை, தென்காசி, குமரி ஆகிய 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளதால் வாக்குப்பதிவு பாதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழக கடலோர மாவட்டங்கள் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
சுமார் 0.9 கிமீ உயரத்தில், கிழக்கு விதர்பா முதல் குமரிக்கடல் வரை தெலங்கானா, உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இடி, மின்னலுடன் மழை பெய்யும்
இதனால் இன்றும், நாளையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
25 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதிகபட்சம் வெப்பநிலை எப்படி?
இன்று முதல் 27-04-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும். உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னையில் எப்படி?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (23-04-2026) மற்றும் நாளை (24-04-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம்" என்று கூறியுள்ளது.
நெல்லை மற்றும் தென்காசியில் பிற்பகல் 3 மணி நேர நிலவரம்:
நெல்லை மாவட்டம் - 62.41% வாக்குகள் பதிவு
* திருநெல்வேலி: 63.59%
* அம்பாசமுத்திரம்: 67.94%
* பாளையங்கோட்டை: 55.76%
* நாங்குநேரி : 62.85%
* ராதாபுரம் : 62.46%
தென்காசி மாவட்டம் - 67.16% வாக்குகள் பதிவு
* ஆலங்குளம் 67.85 %
* கடையநல்லூர் 66.83%
* தென்காசி 66.57 %
* சங்கரன் கோவில் 66.57
* வாசுதேவநல்லூர் 67.98















Click it and Unblock the Notifications