பொத்துக்கிட்டு ஊத்தப் போகுது வானம்! இலங்கையில் உருவாகும் வருண சக்கரம்! 4 மாவட்டங்களுக்கு அலர்ட்!
சென்னை: அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில், இன்று இலங்கை அருகேயும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதனால், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில் எதிர்பார்த்த மழை பொழிவு இல்லாத நிலையில் கடைசி இரண்டு வாரங்களில் பருவமழையின் தாக்கம் தீவிரம் அடைந்து இருக்கிறது.
வங்க கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.

நேற்று முன்தினம் முதல் தமிழகத்தின் உள் மாவட்டங்கள், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பில்," மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நிகோபார் தீவுகளில் இருந்து தென்கிழக்கே 870 கிமீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக்கூடும்.
குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் - இலங்கை பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, தெற்கு இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (நவம்பர் 27) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக இன்றும் நாளையும் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், நாளை தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களிலும், நாளை மறுநாள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications