கோவை, ஈரோடு, நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று கோவை, ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருப்பூர், தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் சென்னைக்கு அருகில் கடலில் நிலை கொண்டிருந்த போது, கொஞ்சம் கொஞ்சமாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை வலுவிழந்தது. அதன்பின் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. ஆனாலும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.

இதையடுத்து 12 மணி நேரமாக நீடித்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தென் மேற்கு திசையில் வடதமிழகம் - புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்க கூடும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் சென்னைக்கு அருகே இப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்து வருகிறது.
இன்னும் 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திருப்பூர், நாமக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிப்பதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications