வட மாவட்டங்கள் டார்கெட்.. அடுத்த 2 மணி நேரம்.. சென்னை + 21 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, நாகை உள்பட 22 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 22 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இரவில் இடி மின்னலுடன் மழை பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளில் தாழ்வான சாலைகளில் தண்ணீர் தேங்கியது. சாலையில் தேங்கி நின்ற மழை நீரை ராட்சத குழாய்கள் மூலம் உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் நேற்று நள்ளிரவு வரை பெய்த மழை இன்று காலையில் சற்று ஓய்ந்தது.

ஆனால் திருவள்ளூரில் காலையிலும் மழை ஒருசில இடங்களில் பெய்தது. இன்று காலையில் திருவள்ளூரில் சோழவரம், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. மழை காரணமாக கொட்டும் மழையில் வாகன ஓட்டிகள் பலரும் நனைந்த படியே செல்வதையும் காண முடிந்தது. சென்னையில் நள்ளிரவு வரை இடி மற்றும் மின்னலுடன் பெய்த மழை காலையில் வெறித்தது.
இந்த நிலையில் அடுத்த 3 மணி நேர அப்டேட்டை வானிலை மையம் வெளியிட்டது. இதில், இன்று காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், இதில், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
வானிலை மையம் கூறியபடி திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருசில இடங்களிலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்தது. இந்த நிலையில் தற்போது சென்னையில் மழை மீண்டும் வெளுக்க தொடங்கியுள்ளது. பயங்கர இடி மற்றும் மின்னலுடன் சென்னையில் மழை கொட்டத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே சென்னை உள்பட 16 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது இன்று மதியம் 1 மணி வரை 22 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், அரியலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பயங்கர இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக இன்று காலையில் வானிலை மையம் கூறுகையில், 'வடகிழக்கு பருவமழை இன்னும் ஒரு சில நாட்களில் துவங்க உள்ள நிலையில், தென் கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று தெரிவித்து இருந்தது.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.












Click it and Unblock the Notifications