நாளை தென் மாவட்டங்களில்.. டிச 31, ஜன 1 இல்.. மீண்டும் வெளுக்க போகுது கனமழை.. சென்னை வானிலை மையம்
சென்னை: வரும் டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்றும் தென் மாவட்டங்களில் நாளை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் இயல்பைவிட அதிக அளவு மழை பெய்ததது. இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் கடும் சேதம் ஏற்பட்டது. அது முடிந்து இயல்பு நிலை திரும்புவதற்குள் தென் மாவட்டங்களில் கடந்த 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெரு மழை பெய்து அங்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது.

அதன்பின்னர் மழை குறைந்து வறண்ட வானிலையே நிலவி வருகிறது. அதேநேரம் ஒரு வாரத்துக்கு பிறகு தென் மாவட்டங்களில் நேற்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தது.
இந்த நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் நாளை (சனிக்கிழமை) முதல் மீண்டும் மழை ஆரம்பிக்க இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " இன்று (வெள்ளிக்கிழமை) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை மறுதினமும் (ஞாயிற்றுக்கிழமை), அதற்கு அடுத்த நாளும் (திங்கட்கிழமை) தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
நாளை, நாளை மறுதினம் மற்றும் 1-ந்தேதிகளில் குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய மன்னார் வளைகுடா, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசக்கூடும்" என்று வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications