சென்னையில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை.. மேஜர் ஏரியாக்களில் துவம்சம்! அவுட்டரையும் விடலயே!
சென்னை: நேற்று இரவு சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாகப் பெய்த மழையால் சென்னையின் முக்கிய பகுதிகளில் 1 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தைச் சந்தித்தனர்.
சென்னையில் மயிலாப்பூர், ஐஸ் ஹவுஸ், அண்ணா நகர், நந்தனம், கிண்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.
மேலும், கிண்டி, ஆலந்தூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெப்பம் தணிந்துள்ளது. அதேசமயம் பல இடங்களில் சாலைகளில் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
இந்நிலையில், சென்னையில் மழை அளவு பற்றிய தகவலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக கத்திவாக்கம் பகுதியில் 3 செ.மீ மழையும், ஐஸ் ஹவுஸ், மணலி, எம்.ஆர்.சி நகர் ஆகிய பகுதிகளில் 2.செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மதுரவாயல், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, திருத்தனி ஆகிய இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 6 செ.மீ மழை பெய்துள்ளது., பொன்னேனி பகுதியில் 4 செ.மீ மழையும், திருவள்ளூரில் 3 செ.மீ மழையும், ஆவடி, மாதவரம், குப்பிடிப்பூண்டியில் தலா 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications