கோவை, சேலத்தையும் மிரட்டிய பேய் மழை.. பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு
கோவை: கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது. கொட்டி தீர்த்த கனமழையால் கோவையில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

சென்னை மட்டும் இன்றி கோவை, சேலம் ஆகிய மேற்கு மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கோவையில் பல்வேறு இடங்களிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. கோவையின் முக்கிய பகுதிகள் கூட வெள்ளக்காடாக காட்சி அளித்தன. மழை காரணமாக கோவை மாவட்டத்தில் இன்று அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். கோவை கதிரவன் லேஅவுட் பகுதியில் சங்கனூர் பள்ள கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். அதேபோல, சேலத்திலும் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, பச்சப்பட்டி, கிச்சிபாளையம், முகமதுபுரா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது குறிப்பாக முகமதுபுரா பகுதிகளில் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். கொட்டி தீர்த்த கனமழையால் சேலம் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தான், சேலம் மாவட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதையொட்டி சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக மழை நீர் அதிக அளவு தேங்க கூடிய குடியிருப்பு பகுதிகளான பச்சப்பட்டி, ஆறுமுக நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு அந்த பகுதியில் மழை நீர் தேங்காத வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம்" என்று கூறினார்.











Click it and Unblock the Notifications