மிதக்கும் தென் மாவட்டங்கள்! பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்து கழகம் கொடுத்த அப்டேட்
சென்னை: தொடர்ந்து 36 மணி நேரமாக கொட்டிய கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இந்த நிலையில், தென் மாவட்டங்களுக்கு 60 பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய நிலையில் பெரும்பாலான பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களில் நேற்று முன் தினம் முதல் இடைவிடாது பெய்த மழையால் 4 மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழையால் திரும்பிய பக்கம் எல்லாம் தண்ணீராய் காட்சி அளிக்கிறது. தாமிரபரணி ஆற்றில் இரு கரையும் தொட்டு வெள்ளம் பாய்ந்தோடுகிறது.

இதன் காரணமாக நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் தண்ணீரில் மிதக்கிறது. ரயில்வே ஷ்டேஷன் முதல் புதிதாக கட்டப்பட்டு வரும் பழைய பேருந்து நிலையம் வரை என அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கார்களே மூழ்கும் அளவுக்கு நெல்லையில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலும் வெள்ளம் சூழ்ந்து தனித்தீவாக காட்சி அளிக்கிறது.
தனியார் பஸ்கள் ஓடாது: தூத்துக்குடி மாநகர பகுதியில் மெயின் ரோடுகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி கிடந்தது. சாத்தான்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. சாத்தான்குளம் பஸ் நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் மழைவெள்ளம் சூழ்ந்தது. மெயின் ரோடு, பஜார் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
நொச்சிகுளம் உள்ளிட்ட கிராமங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தொடர் மழை, வெள்ளத்தால் முக்கிய சாலைகள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக பயணிகளின் பாதுகாப்பு கருதி நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.
பேருந்துகள் ரத்து: தென்மாவட்டங்களுக்கு புறப்பட்ட ஆம்னி பஸ்கள் பாதுகாப்பான பகுதி வரை மட்டும் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தென் மாவட்டங்களுக்கான பேருந்து சேவை குறைக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாகவும் பயணிகள் வரத்து குறைவாலும் அரசு போக்குவரத்து கழகம் பேருந்துகளின் இயக்கத்தை குறைக்க முடிவு செய்துள்ளது.
தென் மாவட்டங்களுக்கு 60 பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய நிலையில் பெரும்பாலான பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிலமைக்கேற்ப தென் மாவட்டங்களில் இருந்து பிற இடங்களுக்கு பேருந்து சேவை இருக்கும். பயணிகளின் வருகைகேற்ப குறைந்த அளவில் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications