நீலகிரியில் அடித்து ஊத்திய மழை.. ஒரே நாளில் அவலாஞ்சியில் மட்டும் 35.3 செமீ மழை பதிவு
கோவை: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நேற்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், தொடர்ந்து விடாது மழை பெய்தது. நீலகிரியின் அவலாஞ்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 35.3 செமீ மழை பெய்துள்ளது என்றும், கோவை சின்னக் கல்லாறு பகுதியில் ஒரே நாளில் 21.3 செமீ மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவையில் பெய்த மழை அளவினை பார்க்கலாம்.
மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் கொங்கன் கடற்கரையை கடந்து, படிப்படியாக வலு குறைந்து, வடக்கு உள் கர்நாடகாவில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நிலவுகிறது. இது படிப்படியாக வலுவிழந்தது.
இதேபோல் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை (செவ்வாய்க்கிழமை) உருவாக வாய்ப்பு உள்ளதால், தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும், கேரளா மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது.
ஏற்கனவே நேற்று முன் தினமே கோவை, நீலகிரியில் கனமழை கொட்டி வந்த நிலையில், நேற்றும் இடைவிடாது மழை வெளுத்து வாங்கியது. நேற்று முன் தினம் ஒரே நாளில் நீலகிரி அவலாஞ்சியில் 23 செமீ மழை பதிவாகி இருந்த நிலையில் நேற்று நீலகிரியில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 35.3 செமீ மழை பதிவானது.
இதேபோன்று கோவையின் சின்ன கல்லாறு பகுதியில் நேற்று ஒரே நாளில், 21.3 செமீ மழை பதிவானது. நீலகிரியின் கூடலூர் 15 செமீ, பந்தலூர், சேரம்பாடியில் தலா 14 செமீ மழை மழையும், கோவை செருமுள்ளி, பாடந்துரையில் தலா 10 செமீ மழை பெய்துள்ளது. சிறுவானி அடிவாரம் 12.6 செமீ, சின்கோனா 12.4, வால்பாறை 11.4, சோலையாறு 10 செமீ மழை பதிவானது. இதேபோன்று நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளில் நீர்மட்டம் கடகடவென உயர்ந்து வருகிறது.
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளும் இன்று பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஐந்தருவியில் மட்டும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இருந்தது. இன்று குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றும் கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், நெல்லை, தென்காசி, தேனி, குமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியது

இதற்கிடையே இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர் ஆகிய 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications