சுத்து போடும் மழை மேகங்கள்.. சென்னை உட்பட 31 மாவட்டங்களில்.. அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை கொட்டும்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே இப்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து இருப்பதால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு உட்பட 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாகக் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பூதலூர் (தஞ்சாவூர்) 120 மிமீ மழை பெய்துள்ளது.

மழை இருக்கு: இது மட்டுமின்றி மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. நாளை பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. மழை காரணமாக ஏற்கனவே சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மழையைச் சமாளிக்கத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அடுத்த 3 மணி நேரம்: இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விருதுநகர், தென்காசி, தேனி மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அதேபோல அடுத்த 3 மணி நேரத்திற்கு திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதனால் சில இடங்களில் சாலைகளில் நீர் தேங்கலாம் டிராபிக் பாதிப்பு ஏற்படலாம். மேலும், தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கலாம் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில், "இதனால் இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான - கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications