அடுத்த 2 மணி நேரம்.. சென்னை உட்பட 32 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை.. வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை மொத்தம் 32 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே கோடை வெயிலைத் தனிக்கும் வகையில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதீத வெப்பத்தால் தவித்து வந்த மக்கள் இந்த மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதிலும் கடந்த ஓரிரு நாட்களாகத் தமிழ்நாடு முழுக்க பரவலாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான ஒரு சூழலே நிலவுகிறது.
மழை இருக்கு: இதற்கிடையே மாலை 7 மணி வரை 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மாலை 7 மணி வரை திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கலாம் என்றும் தாழ்வாக இருக்கும் பகுதிகளில் வசிப்போர் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மழையால் டிராபிக் பிரச்சினையும் ஏற்படலாம் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளும்படி வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
சென்னையிலும் மழை: இந்த மாவட்டங்கள் தவிரச் சென்னை, செங்கல்பட்டு, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த 32 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.
வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் வெளியிட்டு இருந்த தினசரி செய்திக்குறிப்பிலும் இன்று மாநிலத்தில் பரவலாகவே மழை இருக்கும் எனக் கூறப்பட்டு இருந்தது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இன்று மே 17ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நல்ல மழை: நாளை மே 18ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications