18 மாவட்டங்களில் கனமழை கொட்டப்போகுது.. மக்களே உஷார்.. வானிலை ஆய்வு மையம் அலர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று 10 மாவட்டங்களிலும், நாளை (அக்டோபர் 3) 18 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், நாளை 18 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல நாளை (அக்டோபர் 3 ஆம் தேதி), திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருப்பத்தூர், திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் அக்டோபர் 4 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை), திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், திருப்பத்தூர், திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப் 30 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் பதிவான மழையின் அளவு 39 செ.மீ ஆக உள்ளது. இந்த காலகட்டத்தில் இயல்பான அளவு 33 செ.மீ. இயல்பைவிட 18 % அதிக மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.
தென்மேற்கு பருவமழை நெல்லை மாவட்டத்தில் இயல்பைவிட மிக அதிகமாகவும், 17 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், 16 மாவட்டங்களில் இயல்பான அளவிலும், 6 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவும் மழை பதிவாகி உள்ளது. தஞ்சை, புதுக்கோட்டை நீங்கலாக டெல்டா மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாக மழை பதிவாகி உள்ளது. தென்மேற்கு பருவமழையில் கடந்தாண்டை ஒப்பிடும்போது தமிழகத்தில் இயல்பைவிட 14% இயல்பை விட அதிகமாக மழைப் பதிவாகி உள்ளது.
கேரளா, தமிழகம், தெற்கு கர்நாடகா, ஆந்திர பிரதேசம், ராயலசீமா ஆகிய பகுதிகளை வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பதிவாக வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தில் இயல்பைவிட அதிகமாகவும், தென் தமிழகத்தில் இயல்பு, இயல்பைவிட குறைவாகவும் வடகிழக்கு பருவமழை பதிவாக வாய்ப்பு உள்ளது.
வடகிழக்கு பருவமழை வானிலை முன்னறிவிப்பில் எல்நினோ, லானினா என்பன ஒரு காரணியாக பார்க்கப்படுகிறது. அடுத்த 3 மாதங்களில் லானினா உருவாவதற்கான வாய்ப்புகள் 80% அதிகம். கடந்த 82 வருடங்களில் லானினா வருடங்களாக பார்க்கப்பட்ட 42 வருடங்களில் 23 வருடங்கள் இயல்பாகவும், 13 வருடங்கள் இயல்பைவிட குறைவாகவும், 6 வருடங்கள் இயல்பைவிட அதிகமாகவும் மழைப்பொழிவு இருந்துள்ளது. அதாவது, 69% இயல்பு, இயல்பைவிட அதிகமாகவும், 31% இயல்பைவிட குறைவாக இருந்துள்ளது.
லானினா வருடங்களாக இருந்த 2010, 2021 ஆகிய வருடங்களில் 2010ல் இயல்பைவிட 43% அதிகமாகவும், 2021ல் 63% இயல்பைவிட அதிகமாக இருந்துள்ளது. மற்றொரு லாமினா வருடமான 2016ல் 62% இயல்பைவிட குறைவாக மழைப்பொழிவு இருந்துள்ளது. எனவே, லானினா என்பது வானிலையில் ஒரு காரணியாக இருந்தாலும், மற்ற காரணிகளையும் வைத்துதான் வானிலை அளவிடப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3 வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது. அக்டோபர் மாதத்தில் 3 மற்றும் 4வது வாரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. வானிலையை மிகத் துல்லியத்தன்மை உடன் கணிப்பதற்கான அறிவியல் சூழல் இல்லை. குறுகிய காலத்தில் அதிக கனமழை பெய்யும் சூழலும் உள்ளது. சென்னைக்குள்ளேயே ஒரு பகுதிக்கும், மற்ற பகுதிக்குமான மழைப்பொழிவின் அளவில் பெரிய வேறுபாடுகள் இருந்துள்ளது எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications