மலைப் பாதைகளில் அடுத்தடுத்து நிலச்சரிவு! தமிழக- கேரளா சாலைகள் துண்டிப்பு- ஐயப்ப பக்தர்கள் தவிப்பு!
தேனி: தமிழகம்- கேரளா இடையேயான மலைப்பாதைகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் இரு மாநில சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சபரிமலை செல்லும், சபரிமலையில் இருந்து திரும்பும் ஐயப்ப பக்தர்கள் பெரும் தவிப்புக்குள்ளாகினர்.
தென் தமிழ்நாட்டை கடந்த 24 மணிநேரமாக பெருமழை புரட்டி எடுத்து வருகிறது. ஒரு ஆண்டு முழுவதும் பெய்திருக்க வேண்டிய மழை ஒரே நாளில் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 93 செ.மீ அளவு கொட்டித் தீர்த்திருக்கிறது. இந்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் 1 லட்சம் கன அடிநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

திருநெல்வேலி மாநகரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இப்பெருமழையால் பல பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.
இதே போல விருதுநகர், தேனி, சிவகங்கை மாவட்டங்களிலும் மழை கொட்டியது. திண்டுக்கல் மாவட்டத்தில் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் தேனியில் இருந்து கேரளா செல்லும் மலைப் பாதையில் குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தை கேரளாவுடன் இணைக்கக் கூடியவைதான் 3 சாலை பகுதிகளும். கேரளா செல்லக் கூடிய இந்த 3 சாலைகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு- கேரளா இடையேயான முதன்மையான தென்மாவட்ட சாலை துண்டிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது நிலச்சரிவை அகற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த சாலை துண்டிப்பால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் தமிழ்நாடு திரும்ப முடியாமல் குமுளியில் தவித்து வருகின்றனர். அதேபோல சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும் தேனி பகுதியில் தவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications