சுழன்றடிக்கும் பேய்க் காற்று! ரப்பர் போல் வளையும் மரங்கள்! சென்னையில் கொட்டும் கனமழை!
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறைக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியே அவுட்டிங் சென்றவர்கள் வீடு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். காற்றும் வேகமாக இருப்பதால் வழியில் ஒதுங்குவதற்கும் அஞ்சுகிறார்கள்.
சென்னையில் காலை முதலே வெயில் கொளுத்தி வந்த நிலையில் திடீரென கும்மிருட்டாகி மேகம் கருக்குது தக்கு ஜிக்கு தக்கு ஜிக் என்பதைபோல் மழை கொட்டி வருகிறது.

மழையுடன் இடி, நல்ல தரைக் காற்று, மரங்கள் எல்லாம் வளையும் அளவுக்கு காற்று வீசுகிறது. சென்னை முகப்பேர், அமைந்தகரை, கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல், ராமாபுரம், மதுரவாயல், வளசரவாக்கம், விருகம்பாக்கம், பூந்தமல்லி, செங்குன்றம், பட்டாபிராம், திருவேற்காடு, குன்றத்தூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் அவதிப்படுகிறார்கள். அதிலும் ஆடி அமாவாசைக்காக கோயில்களுக்கு சென்றவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இரவு 7 மணிக்குள் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், கோவை, விருதுநகர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, சேலம், விழுப்புரம், பெரம்பலூர், தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திண்டுக்கல், அரியலூர், திருச்சி, திருப்பத்தூர், தென்காசி, குமரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் தமிழகத்தில் பரவலாக ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் அதே சமயம் மழையின் அளவு படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
04.08.2024 முதல் 06.08.2024 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
07.08.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 08.08.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
02.08.2024 முதல் 04.08.2024 வரை: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 04.08.2024: மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும். எனவே இந்த பகுதியில் உள்ள கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications