காரைக்குடியில் கனமழையால் கரைபுரளும் வெள்ளம்! இரு சக்கர வாகனங்களின் டயர்கள் முழுவதுமாக மூழ்கிய சோகம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கனமழை பெய்ததால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தென் தமிழகம் மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அரியக்குடி, தேவக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. அதிலும் காரைக்குடியில் வெளுத்து வாங்கி. கனமழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின.
இந்த மழையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். தாழ்வான இடங்கள் மழை நீர் சூழ்ந்ததால் பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த கீழடுக்கு சுழற்சிக்கே இந்த வெள்ளம் சூழ்ந்துள்ளது. 13 ஆம் தேதி அதாவது நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 7 நாட்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்யக் கூடும். மத்திய அரபிக் கடல் பகுதிகளில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகிறது.
இன்றைய தினம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் 13, 14 ஆகிய தேதிகளில் டெல்டா மற்றும் வடதமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் 7 இடங்களில் கனமழை பெய்துள்ளது.
கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என்கிறார்கள். இந்த முறை நிறைய காற்றழுத்தங்கள் உருவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications