கோவை பக்கம் திரும்பிய மழை.. அடுத்த 2 மணி நேரம்.. மதுரை உள்பட 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை
சென்னை: தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக கனமழை வெளுத்து எடுத்து வந்தது. இதனால் ஆயிரக்கணக்கான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இன்றிலிருந்து மழை குறையும் என்று வானிலை மையம் கூறிய நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் கோவை, தேனி, மதுரை, திண்டுக்கல் உள்பட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. நேற்று காலையில் இருந்து இரவு வரை அநேக இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. தென்காசி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மழையில் நனைந்து வீணாகின. ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர். இன்று முதல் மழை படிப்படியாக குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

அதன்படி இன்று காலையில் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. எனினும் மழை பெரிதாக பெய்யவில்லை. மதியத்திற்கு பின்னர் வெயில் கொளுத்தி எடுத்தது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-
கோவை, தேனி, திண்டுக்கல்
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது, இன்று இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்று தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னையில் கிளைமேட் எப்படி
நாளை (04.03.2025) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
வெப்பநிலை எப்படி
சென்னையில் நாளை (04-03-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 5 தினங்களுக்கான வெப்பநிலையை பொறுத்தவரை, இன்று முதல் 7 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் வரை உயரக்கூடும். அதேபோல இன்று முதல் 7 ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் -3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications