சென்னை தொடங்கி திருப்பூர் வரை 17 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. எனவே வட மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காலை 10 மணி வரை சென்னை தொடங்கி திருப்பூர் வரை 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என இரண்டு பருவமழைகள் போதுமான அளவுக்கு மழையை கொடுத்து செல்லும். அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் இறுதி வரை தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது. தென் மாவட்டங்களில் இது பரவலாக மழையை கொடுத்தாலும், டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் அந்த அளவுக்கு மழையை கொடுக்கவில்லை.

இப்படி இருக்கையில்தான் அக்.1ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இது நேற்று வரை இயல்பை விட 65% கூடுதலாக பெய்திருக்கிறது. இந்நிலையில், இன்று காலை 10 மணி வரை 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில்,
சென்னை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும்.
ரெட் அலர்ட் விளக்கம்: மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது ரெட் அலர்ட் விடப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று அர்த்தம். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications