விலகுது பருவமழை.. ஆனால் இந்த 2 நாட்களுக்கு கவனம்! கோவை உட்பட 7 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!
சென்னை: தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 31 ஆம் தேதி 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வரும் இரண்டு நாட்களில், தென்னிந்திய பகுதிகளில் இருந்து வடகிழக்குப் பருவமழை விலக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வானிலை அலர்ட்
கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை, தற்போது வரை தொடர்ந்து வருகிறது. பருவக் காற்றின் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பொழிந்த நிலையில், வரும் நாட்களில் வறண்ட வானிலை நிலவும். வரும் 48 மணிநேரத்தில், தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை விலகக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை அடுத்த இரு நாட்களில் தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் (25-01-2025) நாளையும் (26-01-2025) வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 29ஆம் தேதி இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
30 & 31 ஆம் தேதி கனமழை
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் வரும் 30 ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வரும் 31 ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று (25-01-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications