சென்னையில் இன்று மாலை ஆரம்பிக்க போகும் சம்பவம்.. கனமழை கொட்ட போகுது! வந்த புது வார்னிங்
சென்னை: சென்னையில் நேற்றிரவு முதல் பெய்து வந்த மழை இப்போது தான் நின்றுள்ளது. ஆனால், இது தற்காலிக பிரேக் தான் என்றும் மாலை நேரம் மீண்டும் மழை கொட்டத் தொடங்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக இரவு முதல் மீண்டும் சென்னையில் கனமழை கொட்டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. பருவமழை சீசனில் இப்படித் தொடர்ந்து பெய்யும் மாநிலத்தில் உள்ள பல நீர்நிலைகள் நிரம்பி வருகிறது.

சென்னை மழை: சென்னையைப் பொறுத்தவரைக் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்றிரவு முதலே சென்னை முழுக்க பல இடங்களில் மழை பெய்தது. காலை மழை சற்று குறைந்திருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் கிளம்பிய நிலையில், மழை கருதி கடைசி நிமிடத்தில் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் மழையில் நனைந்தபடியே மாணவர்கள் வீடு திரும்பினர்.
சென்னை காலையில் நல்ல மழை பெய்த நிலையில், அதன் பிறகு மழை கணிசமாகக் குறைந்தது. இதற்கிடையே சென்னை ரெயின்ஸ் பக்கம் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துள்ளது. மதியம் சில மணி நேரம் சென்னையில் மழை இருக்காது என்ற போதிலும், மாலைக்குப் பிறகு மீண்டும் மழை பெய்யத் தொடங்கும் என்று சென்னை ரெயின்ஸ் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சின்ன பிரேக்: இது தொடர்பாக அதில் மேலும், "அடுத்த சில மணி நேரம் மழைக்கு ஒரு சின்ன பிரேக். சென்னையின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். மாலையில் மீண்டும் வெப்பச்சலனம் ஏற்படும் இதனால் மீண்டும் மழை பெய்யும்" என்று பதிவிடப்பட்டுள்ளது. அதாவது இப்போது மழை இல்லை என்றாலும் கூட மாலை மீண்டும் மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நேற்று (11-11-2024) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, மதியம் 1430 மணி அளவில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, இன்று (12-11-2024) காலை 0830 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது.
இதனால் இன்று : கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மழை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அவ்வப்போது இடி, மின்னலுடன் கூடிய மிதமான – பலத்த மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கன – மிக கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான - கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications