அதி கனமழை எச்சரிக்கை.. கலெக்டர்களுக்கு தமிழக அரசிடம் இருந்து பறந்த கடிதம்.. ரெடியா இருங்க மக்களே
சென்னை: தமிழகத்தில் வரும் 15 ஆம் தேதி வரை அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கையை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. கன முதல் அதிகனமழை பெய்யும் பட்சத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தென் மேற்கு பருவமழை முடிந்த நிலையில் வரும் 15 ஆம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் மழை முன்னெச்சரிகைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்துள்ளது. பருவமழையை எதிர்கொள்ள தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே தமிழகத்தில் வரும் 15 ஆம் தேதி வரை கனமழை மற்றும் அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை மையம் கூறுகையில், "சேலம்ஸ கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் , கரூர் , திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் வரும் 13 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகம் மற்றும் காரைக்காலில் வரும் 15 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. லட்சத்தீவுகள், கேரளா, மாஹே, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தான் அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கையை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் அதிகனமழை பெய்யும் பட்சத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
* மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
* மாவட்ட அளவில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
* கன முதல் அதிகனமழை பெய்யும் பட்சத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications