மழை வந்தாலே சின்ராசுக்கு ஆகாது.. தாம்பரத்துக்கு சுத்தமாக ஆகாது.. நேற்று இரவு என்னாச்சு தெரியுமா?
சென்னை: மழை வந்தாலே நம்ம சின்ராசுக்கு (சென்னைக்கு) ஆகாது.. குறிப்பாக நம்ம தாம்பரத்திற்கு சுத்தமாக ஆகாது.. ஏனெனில் வாகன நெரிசலால் ஸ்தம்பித்து போய்விடும். இப்படியான சூழலில் நேற்று பெய்த மழையில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் நடைமேம்பால மேற்கூரையில் அருவி போல் மழைநீர் கொட்டியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.
சிவகாமி கம்ப்யூட்டர் ஜோசியம் விவேக்கை பார்த்து சொல்லும்.. உனக்கு தண்ணீரில் கண்டம் என்று.. அன்று விவேக்கிற்கு சொன்னது நம்ம சென்னைக்கு அப்படியே பொருந்தும்.. தண்ணீரை கண்டாலே நம்ம சின்ராசு சென்னைக்கு சுத்தமாக ஆகாது.. குறிப்பாக நம்ம தாம்பரத்திற்கு ஆகவே ஆகாது..

அதுவும் மாலை நேரங்களில் எல்லாம் மழை பெய்தால், தாம்பரம் தண்ணீரிலேயே கண்ணீர் விடும். அந்த அளவிற்கு நொறுங்கி போய்விடும். சின்ன மழை வந்தாலே எங்கே வெளியே தண்ணீரை அனுப்பி வைப்பது என்று வழிதெரியாமல் விழிப்பிதுங்கி நிற்கும் தாம்பத்திற்கு தெரியாது.. தாங்க முடியாத அளவிற்கு வாகன நெரிசலை சந்திக்க போகிறோம் என்று.. ஆம் தாம்பரத்தில் மழை வந்தாலே ஜிஎஸ்டி சாலையே ஸ்தம்பித்து போகும். போகும் இடம் தெரியாமலும்,போக்கிடம் இல்லாமலும் அல்லாடும் மழை நீர், அத்தனை வாகனங்களையும் நிறுத்தி மறியலே செய்துவிடும்.. அவ்வளவு தான் எடுத்தேன் பாரு ஓட்டம் என்பது போல் அவ்வளவு மக்களும் எல்லா சந்துக்குள்ளும் ஓடி போய் நெரிசலில் தப்பிக்க பார்ப்பார்கள்.. பாவம் வழியே இல்லையேப்பா என்று அத்தனை பேரும் கடைசியில் ஜாம் ஆகி நிற்பார்கள்.
குரோம்பேட்டை மேம்பாலத்திலேயே வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும்.. பல்லாவரம் தாண்டினாலே பாதிபேருக்கு பயமே வந்துவிடும்.. தாம்பரம் குரோம்பேட்டையில் சுரங்கப்பாதை பணிகள் நடப்பதாலும், சரவணா ஸ்டோர்ஸ் சிக்னல் காரணமாகவும் அப்படியே ஸ்தம்பித்து நிற்கும் வாகனங்கள் வெளியேற குறைந்தது அரை மணிநேரம் தவிக்கும். இதெல்லாம் மழை பெய்தாலே நடக்கும் நிகழ்வாக உள்ளது.
நேற்று அப்படித்தான் இருந்தது,, சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், முடிச்சூர், சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை கொட்டியது. இதனால் ஜி.எஸ்.டி. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
இது ஒருபுறம் எனில் தாம்பரம் பேருந்து நிலையத்தையும், ரயில் நிலையத்தையும் இணைக்கும் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலத்தில் உள்ள மேற்கூரையில் மழைநீர் ஒழுகி தண்ணீர் அருவி போல் கொட்டியது. இதனால் நடைமேம்பாலத்தில் நடந்து சென்ற பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். நடைமேம்பால மேற்கூரை நாளுக்கு நாள் சேதம் அடைந்து வரும் நிலையில், அவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று தாம்பரம் மாநகராட்சி மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications